எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யாமல் இருக்கிறீர்கள். நண்பர்கள் சொல்லியோ அல்லது செய்தித்தாளில் படித்தோ, ‘நாமும் முதலீடு செய்வோம்' எனத் தொடங்கி, கையில் இருக்கும் சேமிப்பில் ஒரு பாதியை முதலீடு செய்ய முடிவு செய்கிறீர்கள். உங்கள் சேமிப்பு சுமார் 2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு லட்சத்தை ஒரு நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன தவறு? அதை ஏன் மாதம் 10,000 ரூபாய் என்று 10 மாதங்களில் அல்லது மாதம் 5,000 ரூபாய் என்று 20 மாதங்களில் முதலீடு செய்ய வேண்டும்?
மார்க்கெட் மேலேயே போய்க்கொண்டு இருந்தால், மொத்தம் ஒரு லட்சத்தையும் இன்றே முதலீடு செய்வது நல்லது. அதில்தான் அதிக லாபம் கிடைக்கும். மார்க்கெட் கீழேயே போய்க்கொண்டு இருந்தால், அதில் முதலீடு செய்யவே கூடாது. பேசாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணத்தை போட்டு வைக்க வேண்டும்.
ஆனால் மார்க்கெட் சீராக மேலேயோ கீழேயோ போகாது. ஏறி இறங்கும் தன்மை (ஆங்கிலத்தில் volatility என்று சொல்லப்படும்) மார்க்கெட்டின் இயற்கை. அவ்வாறு ஏறி இறங்கும் வகையில் மார்க்கெட் செல்லும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நல்லது. இதற்கு Systematic Investment Plan அல்லது SIP என்று பெயர்.
இதனால் இரண்டு பயன்கள் உண்டு.
- மார்க்கெட் அதிகமாகப் போகும்பொழுது, பரஸ்பர நிதியில் விலையும் அதிகமாக இருக்கும் (50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்). அப்போது ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதில் 20 பரஸ்பர நிதி யூனிட்டுகள் கிடைக்கும்.
- அடுத்த மாதம் மார்க்கெட் 20% விழுந்தால், இந்த பரஸ்பர நிதியும் 40 ரூபாய் ஆகிவிடும். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு 25 யூனிட்டுகள் கிடக்கும்.
- மூன்றாம் மாதம் மார்க்கெட் பழைய நிலைக்கு வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். பரஸ்பர நிதியின் விலையும் 50 ரூபாய் ஆகிவிடும்.
- இப்போது, உங்கள் மொத்த செலவு 2 மாதத்திற்கு 2,000 ரூபாய். உங்களிடம் இருக்கும் யூனிட்டுகள் 45 ஆகும். அதன் மொத்த மதிப்பு 2250 ரூபாய். நிகர லாபம் 250 ரூபாய்.
மொத்தமாக முதலீடு செய்து இருந்தால், லாபமோ நட்டமோ இருக்காது. - இதற்கு பதிலாக வேறு ஒரு எடுத்துக் காட்டையும் காணலாம். முதல் மாதம் யூனிட்டின் விலை 40 ரூபாய், 2ம் மாதம் 50 ரூபாய், 3ம் மாதம் மீண்டும் 40 ரூபாய் என்று இருந்தால்?
- மொத்தமாக முதலீடு செய்து இருந்தால் நட்டம் இருக்காது. SIP முறையில் செய்திருந்தால், 200 ரூபாய் நட்டம் இருக்கும். (45 யூனிட் * 40 ரூபாய் = 1800 ரூபாய்). அதனால் SIP எல்லா சமயங்களிலும் நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மார்க்கெட் பெரும்பாலும் ஏறி இறங்கியும், நீண்ட நாட்களில் ஏறுமுகமாகவும் (அதாவது 5 வருடம் கழித்து இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும்படி) இருந்தால், SIP முறையில் நல்ல லாபம் இருக்கும்.
இவ்வாறு நான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்திற்கு சென்றால், இந்தியாவில் இருக்கும் எல்லா பரஸ்பர நிதிகளுக்கும், SIP முறையில் முதலீடு செய்வதற்கும், மொத்தமாக முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடலாம்.
உதாரணமாக, Franklin Templeton Prima Plus G எனப்படும் பரஸ்பர நிதியில், 2004 ஜனவரி முதல் 2006 மே மாதம் வரை முதலீடு செய்தால், இப்போது SIP வகையில் 44%ம், மொத்த முதலீட்டில் (அதாவது எல்லா பணத்தையும் 2004 ஜனவரியில் முதலீடு செய்தால்) 35%ம் லாபம் இருக்கும் என்பதை பார்க்கலாம். இங்கு முதலீடு செய்யும் காலத்தை மாற்றி, 2007 மே வரை முதலீடு செய்திருந்தால், இப்போது SIP வகையில் 45%ம், மொத்த முதலீட்டில் 39%ம் லாபம் என்பதை பார்க்கலாம். இந்த தளம், பலவகையான பரஸ்பர நிதிகளில் எவ்வித வருமானம் வந்திருக்கும் என்பதை சுலபமாக கணக்கிட்டு காட்டுகிறது.
சில சமயங்களில் மொத்த முதலீடு அதிக லாபம் தரும் என்பதும் உண்மையே. ஆனால், அதற்கு சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். எது ‘சரியான நேரம்' என்பதை, அது முடிந்து சில வருடங்கள் ஆகும் வரை சொல்ல முடியாது. எனவே அது நாம் பழைய கதையைப் பேசத்தான் உதவுமே ஒழிய, இன்றோ நாளையோ முதலீடு செய்ய முடிவெடுக்க உதவாது.
SIP இல் இன்னோரு பயன் உண்டு. நம்மில் பலர், ஒழுங்காக மாதாமாதம் முதலீடு செய்வதில்லை. SIPஇல், ஆறு மாதத்திற்கு, அல்லது 1 வருடத்திற்கு காசோலைகளை எழுதி மொத்தமாக கொடுத்து விட வேண்டும். அல்லது வங்கியில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொள்ள பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் (ECS or Electronic Clearing Service). அதனால் ‘இந்த மாதம் மறந்துவிட்டேன்' என்ற பிரச்சனை கிடையாது. Regularity என்ற ஒழுங்குப்பாடு குறைந்தால், நாம் இழப்பவை பல. அவற்றில் நிதித்திட்டத்திலாவது ஒரு பாதுகாப்பாக அமைவது SIP முறை ஆகும்.