Saturday, June 21, 2008

நிதித் திட்டமிடுதல்.எடுத்துக்காட்டு 2 மற்றும் 3

எடுத்துக்காட்டு 2: இந்த எடுத்துக்காட்டில், வருவாய் அதிகம் இருக்கும் ஒருவர் எவ்வாறு திட்டமிடலாம் என்பதைப் பார்க்கலாம். ஒருவரது மாத வருமானம் ரூ 50,000 (வரி போன பிறகு) என்று வைத்துக் கொள்வோம்.

இவரது வரவு செலவு கணக்கானது தோராயமாக:இவர்களுக்கு மாத செலவு. உணவு 5000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 10000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 5000 ரூபாய் போடுகிறார். மாதம் 20,000 ரூபாய் வங்கிக் கடன் (வீட்டுக் கடன்) கட்டுகிறார். மீதி 10,000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம். ஆனால் இதிலிருந்து வருடா வருடம் 50,000 ரூபாய் யூலிப் (ULIP) என்ற இன்சூரென்ஸ் மற்றும் பரஸ்பர நிதி சேர்ந்த திட்டத்தில் போடுகிறார். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்படி பணம் போட்டிருக்கிறார், மேலும் 18 ஆண்டுகள் போடவேண்டும்.


வங்கி சேமிப்பு 2 லட்சம். தங்கம் (நகைகள்) 20 பவுன்,இதன் மதிப்பு சுமார் 1.6 லட்சம். இவர் எப்படி திட்டமிடவேண்டும், முதலீடு செய்ய வேண்டும்?

முதலில் இவர் வைப்பு நிதியில் 1 லட்சம் அல்லது 1.5 லட்சம் போட வேண்டும். எல்லாம் சேமிப்பு (savings account) கணக்கில் இருந்தால், சில சமயம் அத்தியாவசியம் இல்லாத செலவில் இது கரைய வாய்ப்பு உள்ளது. வைப்பு நிதியில் இருந்தால், அதை ‘உடைத்து' பணத்தை வெளியே எடுக்க கொஞ்ச நேரம் ஆகும். அப்போது, நாம் ‘இது தேவைதானா?' என்று யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சேமிப்பு நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து வைப்பு நிதியில் போட வேண்டும். அடுத்து ஓரிரு வருடங்களில், இந்த வைப்பு நிதி அளவை 2 அல்லது 4 லட்சமாக அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு:இப்போது பல வங்கிகளில், வைப்பு நிதியையும் சேமிப்பு கணக்கையும் லின்க் செய்ய வழி உள்ளது. என்னைக் கேட்டால், அப்படி செய்ய வேண்டாம் என்று சொல்வேன். வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை 'அவசர தேவைக்கு' (real emergency need) அல்லது திட்டமிட்ட செலவுக்கு (planned expense, like downpayment for a house) மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் எல்.சி.டி. டி.வி.யை எக்சேன்ஜ் செய்து பிளாஸ்மா டி.வி. வாங்க, வைப்பு நிதியை உடைக்கக் கூடாது. வைப்பு நிதியையும், சேமிப்பு கணக்கையும் லின்க் செய்தால், தவறாக செலவு செய்வது சுலபமாகிவிடும்.

அடுத்து, ULIP இல் பணம் போடுவது தவறு என்பது என் கருத்து. சரி, தலையைக் கொடுத்தாகி விட்டது, அடுத்து என்ன செய்வது? நாம் முதலீடு செய்த ULIPஇன் terms and conditionsஐ படிக்க வேண்டும். பல சமயங்களில், ”3 வருடம் கழித்து விலகிக் கொண்டால், ஓரளவு பயன் கிடைக்கும், அதற்கு முன் விலகினால் எல்லாமே கோவிந்தா” என்று இருக்கும். அப்படி இருந்தால், இன்னம் ஒரு வருடம் பணம் கட்டி, அதன் பின் விலகி விட வேண்டும்.

அதன் பின்னர், Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். இதன் செலவு மிகக் குறைவாக இருக்கும். 10 லட்சத்திற்கு வருடத்திற்கு 3000 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இதில் அடுத்த வருடம் நீங்கள் இறந்தால் உங்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் கிடைக்கும், இல்லாவிட்டால் 3000 ரூபாய் போய்விடும். மறுபடி 3000 கட்ட வேண்டும், 2ம் வருடம் நீங்கள் இழந்தால் 10 லட்சம் வீட்டிற்கு, இல்லாவிட்டால் 3000 நிறுவனத்திற்கு.

பிறகு, ULIPஇல் போடாமல் மிச்சமிருக்கும் பணத்தையும், மாத சேமிப்பையும், நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இது 50000-3000 = 47,000 / year + 10,000 / month. அதாவது, சுமார் ஒவ்வொரு மாதமும் 14,000 சேமிக்க முடியும். இது எல்லாவற்றையும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக்கூடாது. முன்பு பார்த்தது போல கொஞ்சம் பணத்தை (உதாரணமாக பாதி சேமிப்பை) சேமிப்பு கணக்கில் வைத்து, 1 லட்சம் சேர்ந்ததும் வைப்பு நிதியில் போட வேண்டும். மீதியை, மாதா மாதம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை எல்லா பணத்தையும் சேர்த்து பரஸ்பர நிதி வாங்கக் கூடாது.

இவரது பிற்கால செலவுகள் என்று பார்த்தால், மகன்/மகளது திருமண/கல்வி செலவுகள், மற்றும் இவர் ரிடையர் ஆன பிறகு இருக்கும் செலவுக்கு பணம் ஆகிய இரண்டுதான். வீடு, இவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

இவரது மாத சேமிப்பான 14,000 வைத்து முதலீடு செய்தால் பிற்காலத்தில் எவ்வளவு பணமாக வரும்? வைப்பு நிதியில் மாதம் 7,000 (அதாவது வருடம் சுமார் 85,000 என்று வைத்துக் கொள்வோம்), மற்றும் பரஸ்பர நிதியில் மாதம் 7,000 போடுகிறார். வைப்பு நிதிக்கு 8% வட்டி என்றும், பரஸ்பர நிதியில் 15% வருமானம் என்றும் வைத்துக் கொள்வேம். இதே கணக்கில் சென்றால், 15 வருடங்கள் கழித்து, இவரிடம் வைப்பு நிதிமூலம் 24 லட்சமும், பரஸ்பர நிதி மூலம் 47 லட்சமும் இருக்கும். மொத்தமாக 71 லட்சம் இருக்கும்.

இது தவிர, 15 வருடத்தில் வீட்டுக்கடன் முழுவதும் அடைத்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டிற்கு கட்டும் பணம் மிச்சம். 15 வருடங்களில் வருமானமும், செலவும் அதிகரித்திருக்கும். சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவரது குழந்தைகளின் கல்லூரி மற்றும் திருமண செலவுகளை சமாளிப்பது சுலபமாகவே இருக்கும்.



எடுத்துக்காட்டு 3:
வருமானம் மிகக் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்யலாம்? உங்கள் மாத வருமானம் 5,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் இருந்தால், இதை வைத்து நிறைய சமாளிப்பது கடினம். பெரும்பாலும், நண்பர்களுடன் சேர்ந்து ரூம் போட்டு தங்கி இருப்பீர்கள்.
  1. நீங்கள் வெளியே கடன்வாங்காமல் சமாளிப்பதையே முதல் வேலை. அடுத்து, வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும்.

  2. கணிப்பொறி பற்றி படித்தோ,அல்லது உங்கள் துறையில் மேல் படிப்பு படித்தோ, ஏதாவது ஒரு வழியில், மாத சம்பளத்தை 10,000 ஆகவாவது உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் சிக்கனமாக இருந்தாலும் போதுமான அளவு சேமிக்க முடியாது.

  3. சேமிப்பு 25,000 அல்லது 30,000 என்று உயர்ந்த பிறகு, அதிலிருந்து 20,000 அல்லது 25,000 ஐ வைப்பு நிதியில் போட வேண்டும். இது அவசரத்திற்கு ஓரளவாவது உதவும்.

  4. நீங்களூம் Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு எடுத்தால், வருடத்திற்கு 1,500 ரூபாய் ஆகலாம். நிச்சயமாக இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும்.

  5. அதன் பிறகு முடிந்தால், மாதம் 500 ரூபாய் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது 1000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். 'பரஸ்பர நிதியானது, பணக்காரர்களுக்கு மட்டுமே சரியானது, நமக்கு சரி வராது' என்ற எண்ணம் வேண்டாம். அது தவறான் எண்ணம்.
  6. இப்படி பரஸ்பர நிதியில் போடும் பணத்தை குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு எடுக்கக் கூடாது. மேலும்பல வருடங்களுக்கு விட்டு வைப்பது, அந்த முதலீடு வளர வழிவகுக்கும்

  7. மாத வருமானம் நன்றாக உயரும் வரை, சென்னையில் வீடு வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் சொந்த ஊரில் குறைந்த விலையில் வீடு கிடைத்தால், அது வேறு விஷய்ம். அதற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு, கடன் வாங்கி சில வருடங்களில் அடைத்து விட முடிந்தால் பரவாயில்லை. “இல்லை, நான் சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறேன்” என்றால் வருமானத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை