Monday, March 31, 2008

நிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning- Index)

இதுவரை எழுதிய பதிவுகளை கீழே தொகுத்திருக்கிறேன்.

  1. நிதி திட்டமிடுதல்-1 (தொடக்கம்) Financial Planning - Introduction

  2. நிதி திட்டமிடுதல்-2. பாதுகாப்பு, மற்றும் சேமிப்பை பங்கிடுதல் Financial Planning (Safety and Savings Distribution)
    • பல வகை முதலீடுகளில் எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றியும், சேமிப்பை எந்த முதலீடுகளில் எவ்வளவு போடலாம் என்பது பற்றியும் விவரங்கள்

  3. வருமானம் (வட்டி விகிதம்) (Returns and Liquidity)
    • ஒவ்வொரு முதலீட்டிலும் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம், எவ்வளவு சுலபமாக பணத்தை எடுக்க முடியும் என்பது பற்றிய விவரம்

  4. பரஸ்பர நிதி கேள்வி பதில் -1 (Mutual Funds Q&A -1)

  5. பரஸ்பர நிதி கேள்வி பதில் -2 (Mutual Funds Q&A -2)

  6. பரஸ்பர நிதி- வைப்பு நிதி (Debt Funds)
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  7. பரஸ்பர நிதி - செலவுகள் (Mutual Fund Expenes/Loads)

  8. பரஸ்பர நிதி - டிவிடெண்ட் மறு முதலீடு (Mutual Funds Dividend Reinvestment
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  9. பரஸ்பர நிதி. எதை வாங்குவது? சில சிபாரிசுகள். (Mutual Funds-What to buy? Recommendations)

  10. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1a (Financial Planning Example 1a)


  11. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1b (Financial Planning Example 1b)

  12. பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds. SIP)


தற்போதைக்கு இதுவே கடைசி பதிவு. 26th May 2008. மீண்டும் எழுத தொடங்கி விட்டேன். வேலை பளு அதிகமாவதால், மற்ற எடுத்துக்காட்டுகளை எல்லாம் எழுதவில்லை. எழுத விட்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக, கீழே.
கீழே பரஸ்பர நிதி என்பது, பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பரந்த பங்கு வாங்கும் பரஸ்பர நிதி (Diversified Equity Mutual Funds, investing primarily in large caps).

1. நீங்கள் இதுவரை பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதி மூலமோ பணம் முதலீடு செய்யவில்லை என்றால், பரஸ்பர நிதி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது. முதலில் உங்களுக்கு கடன் இருந்தால் அதை அடைக்கவேண்டும். வீட்டுக்கடன் மட்டும் விதிவிலக்கு. நீங்கள் 20 -30 வயதில் இருந்தால், சேமிப்பில் 60% பரஸ்பர நிதியிலும் 40% வைப்பு நிதி/பி.எஃப்.இஅல் போடவும். 30-40ல், 50% பரஸ்பர நிதியிலும் 50% வைப்பு நிதியிலும் போடவும். 40-50ல் , சேமிப்பில் 40% பரஸ்பர நிதியிலும், 60% வைப்பு நிதியிலும் போடவும். இந்த வயதில் அடுத்த தலைமுறைக்கான் செலவுகள் (கல்லூரி, திருமணம்) அதிகம் இருக்கும், நீங்கள் 20 லிருந்து 40 வயதில் முதலீடு செய்த பணம் இப்போது பயன்படும். அடுத்தக் கட்டத்தில் 50க்கு மேல் பரஸ்பர நிதியில் முதலீட்டை குறைந்து 20 அல்லது 30% போட்டால் நல்லது.

2. இப்போது உங்களிடம் கையில் நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் பரஸ்பர நிதியில் இது வரை பணம் போடவில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் முதலீடு செய்ய 10,000 மேல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் 5 மாதத்தில் போடவும். இது SIP (Systematic Investment Plan) எனப்படும். இதன் நன்மைகளைப் பற்றி பின்னர் சில மாதங்கள் கழித்து எழுதுகிறேன். உங்களிடம் 5 லட்சம் இருந்தால், மாதம் 20,000 வீதம் 2 வருடம் போடவும். ஒரே நாளில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் இப்பொழுது மொத்த சேமிப்பாக இருப்பதே 5000 ரூபாய்தான் என்றால் அதை ஒரு மாதத்தில் போடலாம். ஆனால் அடுத்த மாதம் முதல் சேமிப்பை அதிகரித்து மாதம் 1000ஆவது போட முயற்சி செய்யுங்கள்.

இது வரை படித்தவர்களுக்கும், கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

Sunday, March 30, 2008

நிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b

கணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்?

Recurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.

நாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்
நாட்கள் அல்லது காலம் (Number of Months, N) = 20 * 12 = 240 மாதங்கள்
வட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)

மாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)


சமன்பாடு

P = (T * i) / { (1+i)^^N -1 }

நமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,
மாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.

இங்கு நினைவில் கொள்ள வேண்டியது:

1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.
2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.
3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.
4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.


கீழே இருக்கும் அட்டவணையில், அவரது தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.


இவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.

இப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.

இவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியில் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.

ஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.

10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


சில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.

பலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.

வருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.

Saturday, March 29, 2008

பரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Reinvestment)

பரஸ்பர நிதியில் டிவிடெண்டை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. டிவிடெண்ட் 2. டிவிடெண்ட் மறு முதலீடு 3. குரோத் (வளர்ச்சி)

பரஸ்பர நிதிகள் எவற்றில் முதலீடு செய்யும் என்பதைப் பொறுத்து 'Diversified Equity Funds' (பரவலான பங்கு வாங்கும் நிதி), 'Debt Funds' (வைப்பு நிதி-பரஸ்பர நிதி), 'Balanced Funds or Hybrid Funds (கலப்பு நிதி, அதாவது பங்கில் கொஞ்சம் முதலீடு, வைப்பு நிதியில் கொஞ்சம் முதலீடு) என்றும் பிரிக்கலாம்.

டிவிடெண்ட் தரும்பொழுது எவ்வளவு வரும்?, நிதியை விற்கும் பொழுது எவ்வளவு வரும்? இவற்றிற்கு எவ்வளவு வரி? என்பது பரஸ்பர நிதியின் வகையைப் பொறுத்தது. நீங்கள் எவ்வளவு நாள் வைத்திருந்து விற்றீர்கள் என்பதையும் பொறுத்தது.

“எனக்கு இதெல்லாம் வேண்டாம், எது நல்லது என்பதை மட்டும் சொல்” என்றால், ‘குரோத் வகையை எடுங்கள், 3 வருடத்திற்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்' என்று சொல்வேன். நீங்கள் இந்தப் பதிவை தொடர்ந்து படித்து குழம்பிக்கொள்ள வேண்டாம்.

“சரி, இருந்தாலும் எனக்கு விவரங்கள் தெரிய வேண்டும். நான் குழம்பிக்கொள்ள மாட்டேன் (அல்லது குழம்புவது எனது உரிமை)” என்றால், தொடர்ந்து படிக்கவும்.



இங்கே முதலில் சுருக்கமாக அட்டவணையிலும், அதன் கீழே விளக்கமாகவும் கொடுக்கிறேன்.
அதில், சில சந்தர்ப்பங்களில் டிவிடெண்ட் முறையில் லாபம் அதிகம் என்பதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரோத் முறையில் லாபம் அதிகம் என்பதும் விளங்கும். எந்த சமயத்தில் டிவிடெண்ட் முறை லாபம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்பதும் விளங்கும்.

வருமான வரி விவரம் (Income Tax Details)








வகை எவ்வளவு நாள் முதலீடு (எப்போது விற்பனை, எப்போது வாங்கினீர்கள்) வருமான வரி
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபத்தில் 15%
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல் (நெடுங்காலம்) வரி இல்லை
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபம், உங்கள் சாதாரண வருமானத்துடன் சேர்க்கப்படும். வரி 0% முதல் 30% வரை போகலாம்
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல்(நெடுங்காலம்) லாபத்தில் 10 அல்லது 15% (பட்ஜெட்டிற்கு பிறகு சரியாகத் தெரியவில்லை)


டிவிடெண்ட் பற்றிய விவரங்கள்:




வகை டிவிடெண்ட் வரி
பங்கு பரஸ்பர நிதி வரி இல்லை
வைப்பு நிதி-பரஸ்பர நிதி மொத்த டிவிடெண்டில் 15% ***. லாபத்தில் அல்ல


***டிவிடெண்டில் 15% (சரியாகச் சொன்னால் 14.16%)வரி என்றால், உங்களுக்கு டிவிடெண்டு கொடுப்பதற்கு முன்னாலேயே, நிறுவனம் அரசுக்கு கட்டி விடும். உங்களுக்கு வரும் டிவிடெண்டுக்கு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம்.

கலப்பு நிதி, துறைசார் நிதி: இவற்றில் 65% மேல் பங்கில் முதலீடு செய்திருந்தால், அவை பங்கு பரஸ்பர நிதி என்று கருத்தப்படும். இல்லாவிட்டால் ‘வைப்பு நிதி-பரஸ்பர நிதி' என்று கருதப்படும். இதை வைத்தே வருமான வரியும், டிவிடெண்ட் வரியும் கணக்கிடப்படும்.

இப்படி வரும் டிவிடெண்டில் மீண்டும் பரஸ்பர நிதி வாங்கினால், “டிவிடெண்ட் மறு முதலீடு” (Dividend Reinvestment) என்று பெயர்.

டிவிடெண்ட் வேண்டாம், என்றால், ‘குரோத்' அல்லது வளர்ச்சி வகை பரஸ்பர நிதி ஆகும்.பெரும்பாலும் எல்லா நிதிகளிலும் டிவிடெண்ட் மற்றும் குரோத் வகைகள் உள்ளன. பல நிதிகளில் டிவிடெண்ட் மறு முதலீடும் இருக்கின்றன.

1. பரஸ்பர நிதியில் இரண்டு வகை (பங்கு பரஸ்பர நிதி, வைப்பு நிதி-பரஸ்பர நிதி).
2. அதற்கேற்றாற் போல டிவிடெண்டிற்கு வரி.
3. பரஸ்பர நிதியை விற்றால், லாபத்திற்கு எவ்வளவு வருமான வரி என்பது எந்த வகைப் பங்கு, எவ்வளவு நாள் கழித்து விற்றோம் என்பதைப் பொருத்தது.
4. பங்கு வகை பரஸ்பர நிதியின் மதிப்பு அடிக்கடி ஏறும், இறங்கும்.
5. டிவிடெண்ட் வருவதெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி. “எப்போ வரும், எவ்வளவு வரும்” என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் இதை சொல்ல முடியாது. Fund manager நினைத்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை.

இதை நினைவில் வைத்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு பரஸ்பர நிதி பங்கில் முதலீடு செய்கிறது. இன்று அதன் மதிப்பு ரூ 100. 6 மாதத்தில் 120 ஆகிறது. ஒரு வருடத்தில் 90 ஆகிறது. இரண்டு வருடத்தில் 150 ஆகிறது. மூன்றாவது வருடத்தில் 160 ஆகிறது. இது சகஜம்.

இதை குரொத்தில் வாங்கினால்: இதை மூன்று வருடம் கழித்து விற்றால் 60 ரூபாய் லாபம். இரண்டு வருடத்தில் விற்றால் 50 ரூபாய் லாபம். ஒரு வருட முடிவில் விற்றால் 10 ரூபாய் நட்டம். இவை எதற்கும் வருமான வரி கிடையாது.
ஆனால், 6 மாதத்தில் விற்றால் 20 ரூபாய் லாபம். அதில் 15% (அதாவது 3 ரூபாய்) வருமான வரி. மொத்தம் 17 ரூபாய் லாபம்.

இதை டிவிடெண்டில் வாங்கினால்: எப்போது டிவிடெண்ட் தருவார்கள் என்று சொல்ல முடியாது. வாங்கி ஒரு நாளில் 20 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக வைத்துக் கொள்வோம். உடனே உங்கள் பங்கின் மதிப்பு 100 லிருந்து 80 ஆகி விடும். உங்கள் டிவிடெண்டிற்கு டிவிடெண்ட் வரியோ வருமான வரியோ இல்லை.

6 மாதத்தில் 100 ரூபாய் குரோத் நிதி 120 ஆகி இருக்கிறது. 80 ரூபாய் டிவிடெண்ட் நிதி 96 ரூபாய் ஆகி இருக்கும். இப்போது விற்றால்?

உங்கள் லாபம் 16 ரூபாய். அதில் வரி 15% அதாவது 2.4 ரூபாய். விற்பதில் நிகர லாபம் 13.6 ரூபாய். முதலில் 20 ரூபாய் டிவிடெண்டும், இப்போது 80 + 13.6 ரூபாயும் கிடைக்கிறது.

அது மட்டும் இல்லை. நீங்கள் வாங்கிய பொழுது 100 ரூபாய் ஆனது, இப்போது 96 ரூபாய் என்பதால், 4 ரூபாய் நட்டம் என்று கணக்கு காண்பிக்கலாம். (இதற்கு ஒரு விதி இருக்கிறது. டிவிடெண்ட் வருவதற்கு 3 மாதம் முன்போ, அல்லது 3 மாதம் கழித்தோ விற்றால்தான் இப்படி கணக்கி காண்பிக்க முடியும். டிவிடென்ட் வருவதற்கு முந்திய நாள் வாங்கிவிட்டு, டிவிடெண்டை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் விற்று நட்டக்கணக்கு காண்பிக்க முடியாது).

வேறு வகையில் பங்கை விற்று உங்களுக்கு 4 ரூபாய் குறுகிய கால லாபம் வந்தால்,அதில் 15% வரி (0.6 ரூபாய்) கட்ட வேண்டி இருக்கும். இந்த நட்டத்தை வைத்து சரிக்கட்டினால், அந்த 0.6 ரூபாய் மிச்சமாகும். ஆக மொத்தம் 13.6 ரூபாய் நிச்சய லாபம், 14 ரூபாய் வரை லாபம் பார்க்க வழி உண்டு.

அப்படி இந்த வருடம் வேறு எதுவும் குறுகிய கால லாபம் இல்லை என்றால், அடுத்த வருடத்திற்கு இந்த 4 ரூபாய் நட்டத்தை எடுத்துச் செல்லலாம்.

இப்படி 6 மாதத்தில் விற்றால் குரோத்தில் 17 ரூபாயும், டிவிடெண்டில் 13.6 அல்லது 14 ரூபாயும் வருமானம் எனத் தெரிகிறது.


நீங்கள் 6 மாதத்தில் விற்காமல், 1 வருடத்தில் விற்றால்? 100 ரூபாய் 90 என ஆகிறது. 80 ரூபாய் 72 என ஆகும். இப்போது உங்கள் நட்டம் 8 ரூபாய் மட்டுமே. ஏனென்றால், முன்னர் 20 ரூபாய் டிவிடெண்ட்.இப்போழுது விற்றால் 72 ரூபாய். மொத்தம் 92 ரூபாய்.

இப்படி 1 வருடத்தில் விற்றால் குரோத்தில் 10 ரூபாய் நட்டம், டிவிடெண்டில் 8 ரூபாய் நட்டம்.

நீங்கள் 2 வருடத்தில் விற்றால்.(அதற்கு பின் டிவிடெண்ட் கொடுக்கவில்லை என நினைத்துக் கொள்ளவும்). 100 ரூபாய் 150 ஆனால், 80 ரூபாய் 120 ஆகும்.

குரோத்தில் 50 ரூபாய் லாபம். (வரி இல்லை). டிவிடெண்ட் வகையில் 120 + முதலில் வாங்கிய 20 ரூபாய் = 140. அதாவது 40 ரூபாய் லாபம் (இங்கும் வரி இல்லை).


நீங்கள் 3 வருடத்தில் விற்றால். 100 ரூபாய் 160 ஆனால் , 80 ரூபாய் 128 ரூபாய் ஆகும்.

குரோத்தில் 60 ரூபாய் லாபம். டிவிடெண்டில் 128+20 = 148. அதாவது 48 ரூபாய் லாபம்.

இப்படி பல நிலைமைகளை ஆராயலாம். நாலு மாதத்தில் 10 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், என்ன ஆகும்? அதே 10 ருபாய் இல்லாமல் 5 ரூபாய் கொடுத்தால் என்ன ஆகும்? பரஸ்பர நிதி ஒரு வருடத்தில் 120 ஆகுமா அல்லது 110 ஆகுமா?

மண்டையைக் குழப்பிக்கொள்ள இது சிறந்த வழி.


"இல்லை, குழம்பவில்லை” என்றால், அடுத்து வருவது டிவிடெண்ட் மறு முதலீடு.

போன உதாரணத்தில், உங்கள் டிவிடெண்டான 20 ரூபாயை அப்படியே வைத்துக் கொண்டு விட்டோம். அதையும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன ஆகும்? அது குரோத் போலவே வரும். இதற்கும் குரோத்திற்கும் வித்தியாசம் இருக்காது.

இங்கு உடனே (மறுநாளே) டிவிடெண்ட் தந்ததாக கற்பனை செய்தோம். அதற்கு பதில் 6 மாதம் கழித்து டிவிடெண்ட் தந்து அந்த டிவிடெண்டை மறு முதலீடு செய்தால்? அப்போது, முதலில் வாங்கிய யூனிட்டுகள் இன்று வாங்கியதாகவும், டிவிடெண்ட் மறு முதலீட்டில் வாங்கிய யூனிட்டுகள் 6 மாதத்தில் வாங்கியதாகவும் இருக்கும்.

எல்லாவற்றையும் 1 வருடத்தில் விற்றால்? முதலில் வாங்கிய யூனிட் லாபத்திற்கு ‘நெடுங்கால வரி' (பூஜ்யம்)யும் டிவிடெண்ட் மறு முதலீட்டில் வந்த யூனிட்டிற்கு ‘குறுகிய கால வரி' (15%)யும் கட்ட வேண்டும்.

இதை எல்லாம் பார்த்த பிறகு மூளையை சரியாக்க ஒரு சைக்காலஜிஸ்டையும், வருமான வரியைக் கட்ட ஒரு அக்கவுண்டண்ட்டையும் தேட வேண்டும். இதெல்லாம் தேவையா?



இதெல்லாம் வேண்டாம் என்றால், பங்கு-பரஸ்பர நிதியில் குரோத்தில் போடுவதுதான் நல்லது. சில வருடங்களுக்கு தொடக்கூடாது.


வைப்பு நிதி-பரஸ்பர நிதியில் போடுபவர்களுக்கும், அவர்கள் வருமான வரி நிலைமையைப் பொறுத்து டிவிடெண்ட் அல்லது குரோத் பொறுத்தமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இந்த வைப்பு நிதி பரஸ்பர நிதி தேவையில்லை என்பது என் கருத்து.

Friday, March 28, 2008

பரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expenses)

பரஸ்பர நிதியை நாம் வாங்கும் பொழுது, நூறு ரூபாய்க்கு வாங்கினால், எல்லா சமயத்திலும் நமக்கு நூறு ரூபாய்க்கான யூனிட்டுகளைத் தருவதில்லை. பல சமயங்களில் ‘இந்த செலவு, அந்த செலவு' என்று கணக்கு காண்பித்து 97 ரூபாய், 98 ரூபாய்க்கான யூனிட்டுகளைத்தான் தருவார்கள். அதை விற்றாலும், உடனே நமக்கு 97 அல்லது 98 ரூபாய் வராது. அதிலும் ‘விற்கும் செலவு' என்று கணக்கு காண்பிப்பார்கள். இதன் விவரங்களை கீழே பார்க்கலாம்.

சில செலவுகள் தவிர்க்க முடியாதவை. சில தவிர்க்கக் கூடியவை. எல்லா செலவுகளையும் அவர்கள் கண் முன் காண்பிப்பதில்லை. சில தெளிவாகத் தெரியும், சிலவற்றை வருடாந்திர அறிக்கையின் உள்ளே புதைத்து வைத்து இருப்பார்கள். எது என்ன என்ற விவரத்தை ஒரு முறை தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது.

இந்த செலவுகள் அனைத்திலும் நமக்கு இழப்பு என்பதால் தலைப்பில் ‘நட்டம்' என எழுதி இருக்கிறேன். பரஸ்பர நிதி வாங்கினாலே நட்டம் என நினைக்க வேண்டாம்.


  1. Entry Load. (நுழையும்?) வாங்கும் செலவு. பரஸ்பர நிதிகளை வாங்கும்பொழுது உங்களுக்கு வாங்கித்தரும் எஜண்ட் கமிஷன். இது பல சமயங்களில் 2% முதல் 2.5% வரை இருக்கும்.
    • உதாரணமாக , பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில், இது 2 முதல் 2.5% வரை இருக்கும். ஆனால், index fund எனப்படும் பரஸ்பர நிதி யில் குறைவாக இருக்கலாம். 1% அல்லது பூஜ்யமாகவும் இருக்கும். (இவையும் பங்குகளில்தான் முதலீடு செய்யும். பெரிய கம்பெனியில் மட்டும் முதலீடு செய்யும். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்க மாட்டார்கள்)
    • வைப்பு நிதியில் முதலீடு செய்யும் Debt fundsஇல் இது 1% அல்லது 0% ஆக இருக்கும். பெரும்பாலும் 0% ஆகத்தான் இருக்கும்.

    பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியானாலும் (Equity funds) வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி (Debt fund) ஆனாலும், வேறு (கலப்பு நிதி, துறைசார் நிதி) என எந்த வகை நிதி ஆனாலும், நேரடியாக நீங்கள் நிதியை வாங்கினால், இந்த கமிஷன் எடுக்க மாட்டார்கள். இது சமீபத்தில் அரசு உத்தரவுப் படி நடக்கிறது (அரசு உத்தரவு என எளிமையாக்கி சொல்கிறேன். இல்லாவிட்டால், SEBI என்றால் என்ன, அதற்கும் அரசிற்கும் உள்ள தொடர்பு என முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகவேண்டி இருக்கும்). இதற்கு முன் (2007 வரை), நீங்கள் நேரடியாக வாங்கினால் கூட 'ஏஜண்ட் கமிஷனாகிய இந்த செலவை' விற்கும் நிறுவனமே வெட்கமில்லாமல் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டது.

    உங்களுக்கு ஒரு ஏஜண்ட் வந்து, (அ) பரஸ்பர நிதிகளின் விவரங்களை எடுத்துக் கூறி, (ஆ) உங்கள் தேவைகளைக் கணக்கில் கொண்டு, ‘இந்த நிதியில் முதலீடு செய்யுங்கள்' என உங்கள் நன்மையை முதலில் வைத்து சொன்னால் (அதாவது என்னைப்போல இருந்தால் :-) ), அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். குறைந்த பட்சம் உங்களுக்கு விண்ணப்ப படிவத்தை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் நிரப்பியதை சரிபார்த்து நிறுவனத்திற்கு எடுத்து சென்றால், கொஞ்சமாவது உதவி செய்கிறார். அவருக்கு கமிஷன் கொடுப்பது சரியானது. நாமே ஆராய்ந்து முடிவுக்கு வந்து பரஸ்பர நிதியை வாங்கும்பொழுது, நிறுவனங்கள் ஒன்றுமே செய்யாமல் நம் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொளவது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் நிறுவனங்கள் வெட்கமில்லாமல் எடுத்துக்கொண்டன என்று சொல்கிறேன்.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும், இது ”entry load" இவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியும் படி கொடுத்திருப்பார்கள்.


  2. Exit Load, (வெளியேறும்)விற்கும் செலவு. இது விற்கும் செலவு எனபதற்கு பதிலாக, ‘விற்பதற்கான தண்டனை' என்று சொல்லலாம். பெரும்பாலான நிறுவனங்கள் வாங்கும் செலவு பூஜ்யம் என்று சொன்னால், விற்கும் செலவில் தீட்டி விடும். இவையும் பங்கு-பரஸ்பர நிதிகளிலும், வைப்பு நிதி பரஸ்பர நிதிகளிலும் இருக்கும். பெரும்பாலும் 0% என்று இருந்தாலும், சில சமயங்களில் இது 1 அல்லது 2% ஆக இருக்கும்.

    பல சமயங்களில் இது condition உடன் வரும். அதாவது நீங்கள் ஒரு பரஸ்பர நிதியை வாங்கி 6 மாதத்திற்குள் விற்றால் அல்லது 3 மாதத்திற்குள் விற்றால், அல்லது 1 வருடத்திற்குள் விற்றால், விற்கும் செலவு என்ற பெயரில் 1% அல்லது 2% தர வேண்டி இருக்கும். அந்த காலக் கெடுவை தாண்டி விட்டால், இது பூஜ்யம் ஆகிவிடும்.

    எனது கருத்துப்படி நீங்கள் 3 வருடத்திற்கு பரஸ்பர நிதியை வைத்திருந்தால், ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது பூஜ்யம் ஆகிவிடும். அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

    விற்கும்பொழுது நிறுவனத்திற்கு செலவு என்று ஒன்றும் கிடையாது. ஆனால், அவற்றின் திட்டம் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும். நாம் உடனடியாக பணத்தை கேட்டால் அதற்கு penalty ஆக கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள். இது ஓரளவு நியாயம் என நினைக்கிறேன்.

    எடுத்துக்காட்டாக, ஒரு நண்பரும் நீங்களும் சேர்ந்து பணம் போட்டு வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் திட்டப்படி, ஆளுக்கு 1 லட்சம் போட்டு தொடங்குகிறீர்கள். ஆரம்பித்த மறு நாளே லாபம் வராது. ஒரு வருடம் கழித்துதான் போட்ட பணமே திரும்ப எடுக்க முடியும். இரண்டாம் ஆண்டிலிருந்து ஓரளவு லாபம் வரும் என்று கணக்கிடுகிறீர்கள்.

    6 மாதத்தில், நண்பர் வந்து ‘எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. எனது ஒரு லட்சத்தை கொடுத்து விடு' என்று சொன்னால் என்ன சொல்வோம்? ‘இன்னம் ஆறு மாதம் பொறு, போட்ட பணத்தை எடுத்து விடுவோம். உனக்கும் எனக்கும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்.' என்று சொல்வோம். நண்பர் ‘இல்லை, இப்பொழுதே கொடு' என்று கேட்டால் வியாபாரத்தை இழுத்து மூடி, வந்த பணத்தை பிரித்துக் கொள்வோம். அப்போது, போட்ட பணத்தைவிட கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

    அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திரும்ப எடுத்தால், கொஞ்சம் penalty கொடுப்பது அநியாயமாக எனக்கு தோன்றவில்லை.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் இதுவும் வெளிப்படையாக ‘விற்கும் செலவு இவ்வளவு' என்று கொடுத்திருப்பார்கள்.

    அரசின்விதிப்படி, வாங்கும் செலவும் விற்கும் செலவும் சேர்த்து 6%க்கு மேல் போகக்கூடாது. ஏதோ நம் நல்ல நேரம், இதுவரை 2.5% அல்லது 3.5% மேல் நிறுவனங்கள் கேட்கவில்லை. அரசு அனுமத்தித்து இருக்கிறதே என்று மேலும் தீட்டவில்லை


  3. CDSC இதுவும் மேலே சொன்ன Exit load/ விற்கும் செலவு போன்றது. இதன் விரிவு Contingent Deferred Sales Charge. தமிழில் மொழி பெயர்க்கும் அளவு முக்கியமானது இல்லை. இப்பொழுது பெரும்பாலும் நிறுவனங்கள் இதை வாங்குவதில்லை. 'விற்கும் செலவு' என்று மொத்தமாக சொல்லி விடுகிறார்கள். இதுவும், 6 மாதத்திற்குள் விற்றால் 1%, ஒரு வருடத்திற்குள் விற்றால் 0.5% என்று இருக்கும். பல வருடங்கள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை.

    இதுவும் வெளிப்படையாகக் கொடுத்திருப்பார்கள். இது கொடுக்காவிட்டால், இது பூஜ்யம் (அல்லது விற்கும் செலவில் சேர்க்கப்பட்டு விட்டது) என அறிந்து கொள்ளலாம்.

  4. Expenses , மற்ற செலவுகள் இது பரஸ்பர நிதி நிறுவனம், ஆபிஸ் நடத்துவதற்கான செலவு. ஆபிஸில் வாடகை அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இதையெல்லாம் நாம்தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நமது பரஸ்பர நிதியை நடத்துபவர் (Fund Manager) சம்பளம் இதிலிருந்துதான் போடும். இது ஒவ்வொரு நிதியிலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாறும்.

    இது எவ்வளவு என்பது வெளிப்படையாகத் தெரியாது. தோண்டித் துருவிப் பார்த்தால்தான் தெரியும். இது 1% அல்லது கீழே இருப்பது நல்லது. சில பரஸ்பர நிதிகள் சிறிய கம்பெனிகளில் (small cap) முதலீடு செய்யும். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து நல்ல கம்பெனியை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினம் என்பதால், அப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் expenseஐ அதிகமாக எடுத்துக் கொள்ளும்.


  5. புது ஃபண்ட் செலவு (New Fund Offer or NFO expenses) புதிதாக ஃபண்ட் ஆரம்பிக்கும்பொழுது Initial Expenses அதாவது ”தொடங்கும் செலவுகள்” என்று கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்வார்கள். பழைய நிதியை அதிகம் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. புதிய நிதி வருவது பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க விளம்பரம் செய்ய வேண்டும், எஜண்டுகளுக்கு சொல்ல வேண்டும் என்பது போன்ற செலவுகள் இதில் அடங்கும்.
    • பெரும்பாலும் புது நிதிகளில் வாங்கும் செலவு (entry load) இருக்காது. ஆனால், அதற்கு பதில் இந்த தொடங்கும் செலவு இருக்கும். இது ”வாங்கும் செலவை” விட அதிகமாக இருக்கும்.
    • நீங்கள் பழைய நிதியை நேரடியாக வாங்கினால், ‘வாங்கும் செலவு' கிடையாது. புதிய நிதியை நேரடியாக வாங்கினாலும், ஏஜண்ட் மூலம் வாங்கினாலும் ‘தொடங்கும் செலவு' உண்டு. 'புதிய நிதியை வாங்க வேண்டாம்' என்று நான் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்



சுருக்கமாக,











செலவு வகை அளவு வெளிப்படையாகத் தெரியுமா? தவிர்க்க முடியுமா? மற்ற விவரங்கள்
நுழையும்/ வாங்கும் செலவு (Entry Load) 0% முதல் 2.5% வரை தெரியும் நேரடியாக வாங்கினால் இந்த செலவு இல்லை
வெளியேறும்/விற்கும் செலவு (Exit Load) 0% முதல் 2% வரை தெரியும் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
CDSC 0% முதல் 1% வரை தெரியும். இது கொடுக்காவிட்டால், இதை ‘விற்கும் செலவில்' சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
தொடங்கும் செலவு (initial expense) 4% வரை தெரியாது தவிர்க்க முடியாது NFO வாங்காமல் இருப்பதுதான் நல்ல வழி


இந்த செலவு விவரங்களை எல்லாம் நாம் ஆர்வமாக இருக்கும்பொழுது ஒவ்வொரு நிதியிலும் எவ்வளவு என்று படிப்போம். இதே துறையில் ஈடுபடுவர்களுக்கு சில மாதங்களில் எந்த நிதியில் எந்த செலவு என்பது அத்துப்படி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் முதலில் ஆர்வம் இருந்தாலும், பின்னர் குழப்பமே மிஞ்சும்.

அதனால், (அ) புதிய ஃபண்ட் களை வாங்க வேண்டாம். (ஆ) முதலீட்டை 3 வருடங்களுக்கு விற்க வேண்டாம் (இ) முடிந்தால், நேரடியாக நிறுவனத்திடம் வாங்கவும். இது ஒவ்வொரு பரஸ்பர நிதிக்கும் ஒரு முறை செய்ய வேண்டும். கொஞ்சம் தொல்லை பிடித்த வேலை என்றாலும், உங்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, 15 அல்லது 20 வருடம் பணம் எடுக்க மாட்டேன், இது நெடுங்கால முதலீடு என்று நினைப்பவர்களுக்கு இது முக்கியம். நீங்கள் 3 அல்லது 5 வருடத்தில் எடுத்துவிட்டால், எஜண்ட் மூலம்போவதில் அவ்வளவு இழப்பு இல்லை. கொஞ்சம்தான் இழப்பு. இது இல்லாவிட்டால், entry load வாங்காத சில ஃபண்ட்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கலாம். (ஈ)expense அதிகம் இல்லாத பரஸ்பர நிதி எது என்று பார்த்து வாங்குவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் இது மாறும். ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது 1% இருப்பதால், இதை யோசித்து நேரத்தை வீணாக்க்காமல், போனால் போகட்டும் என்று விட்டு விடுவது நலம்.

நமக்கு ஒரு செலவைக் குறைக்க சுலபமான வழி இருந்தால் அதைக் கடைப்பிடிப்போம். வழி மிகக் கடினமானது, நாம் அடிக்கடி பார்த்து யோசித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும் என்றால் , பேசாமல் செலவை ஏற்றுக்கொள்வோம். இதுதான் நீண்ட காலத்தில் நமக்கு உகந்தது, நம்மால் செய்யக்கூடியது.

Thursday, March 27, 2008

நிதித் திட்டமிடுதல். எடுத்துக்காட்டு 1a. (Financial Planning, Example)

ஒரு எடுத்துக்காட்டு. 30 வயதான ஒருவர், மாதம் 20000 ரூபாய் சம்பாதிக்கிறார். 60,65 வயதான் பெற்றோர். மற்றும் மனைவி, ஒரு குழந்தை (5 வயது). மனைவி வேலைக்கு போகவில்லை. பெற்றோருக்கு பென்ஷன் போல எந்த வருமானமும் இல்லை. இவர் அரசாங்க வேலை பார்த்தால் இவரது வேலை போகாது. வருமானம் நிலையானது.

இவர் பண விஷயங்களைப் பற்றி எவ்வாறு திட்டமிட வேண்டும்?

தற்போதைய மாத வருமானமும் செலவும். இவர்களுக்கு மாத செலவு. வீட்டு வாடகை 7000 ரூபாய், உணவு 3000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 5000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 3000 ரூபாய் போடுகிறார். மீதி 2000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம்.








விவரம் செலவு
வீட்டு வாடகை7000
உணவு3000
இதர செலவுகள் 5000
பிராவிடண்ட் ஃபண்ட் 3000
சேமிப்பு 2000

( நான் இங்கு எழுதும் எண்கள் மிக மிகத் தோராயமானவை. வழி முறையை மட்டுமே கவனிக்கவும். ”இந்த சம்பளம் சரியில்லை, இந்த செலவுக்கணக்கு சரியில்லை, நாட்டு நடப்பு உனக்கு தெரியாதா” என்று சண்டைக்கு வர வேண்டாம்)

தற்போதைய சொத்து சேமிப்பு வங்கியில் 10000 ரூபாய் இருக்கிறது. நகைகளாக 20 பவுன் (160 கிராம்) தங்கம் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 1.6 லட்சம்.

இது தவிர சொத்து என்று எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் எடுக்கவில்லை.


திட்டமிடுதல்.

1. முதலில் அவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் 30,000 ரூபாய் போட்டு வைக்க வேண்டும்.
இரண்டு மாத செலவுக்கான பணம் இருக்கும்.

2. வைப்பு நிதியில் 1 லட்சம் போட வேண்டும். இப்பொழுது பணம் இல்லையென்றால், 10 மாதம் பணம் சேர்த்து 50 ஆயிரம் அளவாவது போட வேண்டும். பெற்றோருக்கு, அல்லது
குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல் நலம் குறைந்தால் இது தேவைப்படும்.

3. உடனடியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். Term Insurance எனப்படும் காப்புதான் உகந்தது.

பின்னர், ஒரு வருடம் கழித்து வைப்பு நிதியில் பணம் போட்ட பிறகு, அடுத்து சேமிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். அதற்கு தேவையான விவரங்கள்:

எதிர்கால செலவுகள் பற்றி திட்டமிடுதல்

முதலில் நமது எதிர்பார்ப்பு அல்லது ஆசைகளைப் அளவாகப் பட்டியலிட வேண்டும்.

1. ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களில், பெற்றோருடைய மருத்துவ செலவுக்கு ஓரிரு லட்சம் தேவைப்படலாம். அப்போது , வைப்பு நிதியை பயன்படுத்திய பின், மறுபடி சேமித்து போட வேண்டும். தவிர, மருத்துவ செலவும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், 10 வருடம் கழித்து இந்த ஒரு லட்சம் பத்தாது. 10 வருடம் கழித்து அது 2 லட்சம் என வைக்க வேண்டும்.

2. 10, 12 வருடம் கழித்து குழந்தை கல்லூரி செலவு வரும். இப்பொழுது தனியார் கல்லூரியில் பொறியாளர் ஆக, ஆண்டுக்கு 1 லட்சம் செலவு (தோராயமாக). அரசு
கல்லூரியில் படித்தால் 20,000 ஆகும். ”எப்படியாவது” நம் மகன்/மகளை பொறியாளர் ஆக்க வேண்டும். 10,12 வருடத்தில் செலவு ஆண்டுக்கு 2 லட்சம் என வைத்துக் கொள்வோம்.
அப்போது, 8 லட்சம் தேவைப்படும்.

3. மகன்/மகளின் திருமண செலவு. இது இன்னும் 20 வருடங்களில் தேவைப்படும். இப்போதைய நிலவரத்தில், நாம் 6 லட்சத்தில் நடத்தலாம், 20 வருடம் கழித்து என்றால் 18 லட்சம் ஆகலாம்.

4. 30 வருடம் கழித்து நாம் ரிடையர் ஆகும்பொழுது, பென்ஷன் பி.எஃப் தவிர கையில் பணம் இருந்தால் நல்லது. மருத்துவ செலவுக்கு ஆகும். நம் மகன்/மகளுக்கு பாரமாக இருக்க வேண்டாம். இது எவ்வளவு என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு 20 லட்சம் இருந்தால் நல்லது.

5. நமக்குன்னு சொல்லிக்க ஒரு வீடு இருந்தால் பரவாயில்லை. இப்போது சென்னையில் வீடு விற்கும் விலையில் குறைந்த பட்சம் 40 லட்சம் ஆகும். நம் சொந்த ஊரில் 20 லட்சத்தில் நல்ல வீடு/பிளாட் கிடைக்கும். அது இன்றைய நிலவரம். இப்போது வீடு வாங்காமல், 5 வருடம் கழித்து வாங்கினால், அது 25 லட்சம் ஆகலாம்.














எண் தேவை ஆண்டுகள் பணத்தின் அளவு
1. மருத்துவ செலவுக்கு வைப்பு நிதியில் போட 10 1 லட்சம்
2. குழந்தை கல்லூரி செலவு 12 8 லட்சம்
3. குழந்தை திருமண செலவு 20 18 லட்சம்
4. ரிடையர் ஆகும்பொழுது கைக்காசு 30 20 லட்சம்
5. வீடு 5 25 லட்சம்
மொத்தம் தேவை 72 லட்சம்


சில விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.

1. இப்போதே அவருக்கு லாட்டரியில் 72 லட்சம் கிடைத்தால் அவர் தேவைகள் முடிந்து விடும். (முடியாது, ஏனென்றால் அப்பொழுது எதிர்பார்ப்பும் செலவும் அதிகரிக்கும். இருந்தாலும்....)

2. வெளியில் கடன் வாங்காமல் இப்பொழுது இருக்கும் சம்பளத்தில் அவரால் இவ்வளவு தேவைகளையும் நிறைவேற்ற முடியாது என்று 'தோன்றுகிறது'. கணக்கு போட்டு பார்த்தால்தான் உண்மை தெரியும். முடியாது என்றால் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.



எதிர்கால மாத வருமானம் மற்றும் செலவு

1. நமது வருமானம் இப்படியே இருக்காது. நமக்கு மேல் பதவி சில வருடங்களில் வரலாம். நமது மனைவி வேலைக்கு போனால், செலவு 2000 அதிகரிக்கும். வருமானம் மாதம் 10000
அதிகரிக்கும். மொத்தம் நிகர வருமானம் 8000. இப்போதைக்கு மனைவி வேலைக்கு போவதில்லை என வைத்துக் கொள்வோம்.

2. நமக்கே வருடா வருடம் , வருவாய் 10% (simple interest)அதிகரிக்கும் என கணக்கிடலாம். 10 வருடங்களுக்கு பிறகு, 40,000 வரும். அதன் பின் ஒவ்வொரு வருடமும் 4000 அதிகரிக்கும் என கணக்கிடலாம்.

3. மாத செலவும் கூடவே அதிகரிக்கும். அதனால், சேமிப்பு இப்போது மாதம் 2000 என்று இருப்பது, அடுத்த வருடம் (22000 - 19000) = 3,000 என்று மாறலாம். அதற்கு அடுத்த வருடம் 3500 என்று மாறலாம்.



இந்த நிலையில் அவர் தேவைகளை கணக்கிடுகிட்டு விட்டார். வருமானம் மற்றும் சேமிப்பு பற்றியும் ஓரளவு தெரிகிறது.

அடுத்த பதிவில் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தால் இவரது தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று கணக்கிடுதல்.

Wednesday, March 26, 2008

பரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)

(மங்களூர் சிவா, உங்கள் கேள்வி/கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இப்பதிவு. இதை எழுதததூண்டியதற்கு நன்றி) .

பரஸ்பர நிதிகளில் பல வகைகள் உண்டு என்பதை முன்பு பார்த்தோம். சற்று எளிமைப் படுத்தினால்

  1. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. எல்லா வகைப்பங்க்குகளையும் வாங்கும் நிதிக்கு Diversified Equity Fund என்று பெயர். பங்குகள் விலை ஏறினால் இவற்றின் மதிப்பு ஏறும். இறங்கினால், இவற்றின் மதிப்பு இறங்கும்.
    • கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி 2008 முதல் மார்ச் 2008 வரை) மார்க்கெட் சரிந்த பொழுது, இந்த வகைப் பரஸ்பர நிதிகளின் மதிப்பும் குறைந்திருக்கும்

  2. வைப்பு நிதி (Fixed Deposit)இல் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள். இவை பற்றி கீழே விவரமாகப் பார்க்கலாம்

  3. கலப்பு நிதிகள் (Hybrid funds or Balanced Funds). இவை கொஞ்சம் பங்குகளிலும் கொஞ்சம் வைப்பு நிதிகளிலும் முதலீடு செய்யும்.

  4. துறை சார் நிதி (Sector Funds). இவை பங்குகளிலேயே குறிப்பிட்ட துறை பங்குகளை மட்டும் வாங்கும்.



வைப்பு நிதி பரஸ்பர நிதி என்றால் என்ன?

முதலில், பெரும்பாலான மக்களுக்கு இது தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்ய இந்நிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் பணத்தை வைப்பு நிதியில் (Fixed Deposit) போடலாம் என்றால், அதற்கு பல வங்கிகளில் போடலாம். ஒவ்வொரு வங்கியும் ஒரு வட்டி கொடுக்கும். State Bank of India ஒரு வருடத்திற்கு 8 சதவிகிதம் கொடுத்தால் இன்னொரு வங்கி 7 % கொடுக்கலாம்; மற்றும் ஒரு வங்கி 9% கொடுக்கலாம். கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். இது தவிர கூட்டுறவு வங்கிகளும் வைப்பு நிதியில் 10% கூட கொடுக்கலாம். ஒரேடியாக எல்லோரும் 8% தரும் பொழுது ஒரு வங்கி 25% தராது.

இது தவிர சில கம்பெனிகளும் வைப்பு நிதிக்கு வட்டி கொடுக்கும். Cholamandala, ESSAR, (இன்னும் பல, எனக்கு மறந்து விட்டது) இவற்றிற்கு பணம் தேவைப்பட்டால், ஒன்று வங்கியிடம் சென்று கடன் கேட்கலாம். அல்லது பொதுமக்களிடம் கேட்கலாம். வங்கியில் கேட்டால் மிக அதிக வட்டிக்குதான் கடன் கிடைக்கும். அதற்கு பதில் பொதுமக்களிடம் 12% அல்லது 13% என்று கடன் வாங்கலாம்.

எல்லா கம்பெனிகளும் நினைத்தவுடன் இப்படி பொதுமக்களிடம் வாங்க முடியாது. சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் வாங்க வேண்டும். ஆனால் இவற்றில் வங்கிகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் நேராக வங்கியில் போட்டுவிடுவீர்களே!

இந்த நிறுவனங்களில் வைக்கும் வைப்பு நிதிக்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவு. அதாவது கம்பெனி திவாலானால், உங்கள் முதலுக்கு மோசம் வரலாம். ஆனால் வட்டி அதிகம்.

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால், 50 லட்சத்தை SBIஇல் 8% வட்டிக்கும், 30 லட்சத்தை கூட்டுறவு வங்கியில் 10% வட்டிக்கும், 10 லட்சத்தை ஒரு நிறுவனத்தில் 12% வட்டிக்கும், கடைசி 10 லட்சத்தை வேறு நிறுவனத்தில் 13% வட்டிக்கும் வைப்பு நிதியாக போடலாம். இதனால், மொத்த முதலும் போய் விடாது. அதேசமயம் வட்டியும் 8% விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். தப்பித்தவறி ஒரு கம்பெனி திவாலானால், உங்கள் பணம் முழுதும் வராமல் , ஒரு 10% இழப்பில் கூட (10 லட்சம் என்பது வட்டியுடன் 11.2 அல்லது 11.3 லட்சம் வருவதற்கு பதில் 9 லட்சமாக வரும்) வரலாம். ஆனால், 1 கோடி பணத்தில், SBIஇல் 4 லட்சமும் (50 லட்சத்திற்கு 8% வட்டி ) , கூட்டுறவு வங்கியில் 3 லட்சமும் (30 லட்சத்திற்கு 10% வட்டி), ஒரு நிறுவனத்தில் 1.2 லட்சமும் (10 லட்சத்திற்கு 12% வட்டி) லாபமாகக் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் 1லட்சம் நட்டம். மொத்தத்தில் 7.2 லட்சம் லாபம். அதாவது 7.2% வட்டி.










எண் முதலீடு வங்கி வட்டி விகிதம்வருமானம்
1. 50 லட்சம்SBI 8%4 லட்சம்
2. 30 லட்சம்கூட்டுறவு 10%3 லட்சம்
3. 10 லட்சம் கம்பெனி 112%1.2 லட்சம்
4. 10 லட்சம்கம்பெனி 213%கம்பெனி திவாலாகி 1 லட்சம் நட்டம்
மொத்தம் 1 கோடி7.2% 7.2 லட்சம்

இதே கம்பெனி திவால் ஆகாமல் ஒழுங்காக பணத்தைக் கொடுத்தால், 1 லட்சம் நட்டத்திற்கு பதில், 1.3 லட்சம் லாபம் கூடி இருக்கும். அதாவது 9.5 % வட்டி.

நிற்க. கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த பிளாக்கை படிக்க மாட்டார்கள் என நினக்கிறேன். ஆயிரம் ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும் வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது?

இப்படி பலர் இருப்பதால், இவர்கள் பணத்தை எல்லாம் சேர்த்து பல கோடிகள் ஆன பின்னர், அவற்றை வட்டிக்கு விடலாம். இதுதான் debt fund எனப்படும் “வைப்பு நிதி பரஸ்பர நிதி”.

இதற்கும் மார்க்கெட்டுக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. மார்கெட் விழுந்தாலும் மேலே பறந்தாலும் கவலை இல்லை. ஆனால், வங்கியில் வட்டி விகிதம் மாறினால், இவற்றின் மதிப்பு மாறும். ஏனென்றால் வங்கி வைப்பு நிதி (மற்றும் நிறுவன வைப்பு நிதி )தான் இதற்கு underlying asset (அடிப்படை சொத்து?)

வங்கியின் வட்டி விகிதம் திடீரென அதிகரித்தால் இதன் மதிப்பு கொஞ்ச காலம் சிறிதளவு குறையும். நான் தவறாக எழுதவில்லை. வட்டி விகிதம் அதிகரித்தால் இதன் மதிப்பு சிறிதளவு குறையும், அதிகரிக்காது. இதற்கு காரணம் என்ன?

நீங்கள் 100 ரூபாயை வங்கியில் ஒரு வருட வைப்பு நிதியாக ஜனவரி 1ல் (2008இல்) போட்டால், உங்களிடம் ஒரு பத்திரத்தில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் தருவதாக எழுதிக் கொடுப்பார்கள். அதே நாள் இன்னொருவர் சென்று 100 ரூபாய் போட்டாலும் அவருக்கும் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் கொடுப்பதாக எழுதித் தருவார்கள். அதாவது 10 சதவிகித வட்டி.

மறுநாள் திடீரென்று வட்டி 5 சதவிகிதம் என்று குறைவதாக கற்பனை செய்யவும். (நடைமுறையில் ஒரேடியாக குறையாது. கணக்கு சுலபமாக இருக்க இப்படி கற்பனை செய்வோம்). அப்போது உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

5% வட்டியில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் வேண்டும் என்றால், நீங்கள் 104.75 ரூபாய் போட வேண்டும். அப்போதுதான் 5% வட்டியில் 110 ரூபாயாக ஒரு வருடத்தில் மாறும். 100 ரூபாய் போட்டால் அது 105 ரூபாயாக மாறும். அதனால், வட்டி விகிதம் குறைந்ததால், உங்கள் பத்திரத்தின் மதிப்பு ஏறக்குறைய 4.75 % கூடிவிட்டது.

இதே வட்டி குறையாமல் கூடி இருந்தால்? 10% பதில் 20% என மாறிவிட்டால், உங்கள் மையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு 91.67 ரூபாய்தான்? ஏனென்றால் 91.67 ரூபாய் போட்டால், ஒரு வருடத்தில், 20% வட்டியில் அது 110 ரூபாய் ஆகிவிடும்.

இப்போது,
  1. உங்கள் முதல் முற்றிலும் முழுகவில்லை என்பதை கவனிக்கவும். 100 ரூபாய் என்பது கொஞ்சம் மதிப்பு குறையலாம் அல்லது கூடலாம். ஆனால் திவால் ஆகாது.


  2. வட்டி விகிதம் இப்படி எல்லாம் எகிறவோ இறங்கவோ செய்யாது. கால் விகிதம் மாறவே மாதக்கணக்காக ஆகலாம். அதனால் உங்கள் இழப்பு அல்லது லாபம் அவ்வளவாக மாறாது. நான்
    சும்மா கணக்கு சுலபமாக இருக்க இப்படி பெரிய மாற்றங்களைக் கற்பனை செய்து கொள்ள சொன்னேன்.


  3. இந்த பரஸ்பர நிதிகளை திவாலாகும் கம்பெனிகளில் வட்டிக்கு விட மாட்டார்கள். அதனால் முதலுக்கு மோசம் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.



சரி, இவ்வளவு சித்திரவதை ஏன்? பேசாமல் வங்கியில் வைப்பு நிதி வைத்து விட்டு போகவேண்டியதுதானே?

அதுதான் பெரும்பாலானவர்களுக்கு சரி. சில சமயங்களில் சிலருக்கு இதில் நன்மை உண்டு.

1. உங்கள் வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடிப்பார்கள். இந்த பரஸ்பர நிதியில், நீங்கள் இவற்றை விற்கும் போது மட்டுமே வரி கட்ட வேண்டும். அதுவும் நீங்கள் கட்ட வேண்டும். அவர்கள் பிடிக்க மாட்டார்கள்.

அதனால், 3 வருடம் விற்காமல் இருந்தால், அதுவரை வரி கட்ட வேண்டியதில்லை. வருடா வருடம் அவர்கள் பணம் பிடிப்பதும், நாம் மேலே கட்டுவது அல்லது திரும்பக் கேட்பது என்ற தொல்லை இல்லை.

2. ஒரு வருடத்திற்குள் விற்றால் முழு வரி கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால், வரி குறைவு. இதற்கு முன் 10% என இருந்தது, இப்போது ப.சிதம்பரம் 15% என மாற்றி இருக்கிறார் என கேள்வி. (இதை சரி பார்க்க வேண்டும். சுட்டிக் காட்டிய மங்களூர் சிவாவிற்கு நன்றி).

3. ஒவ்வொரு வருடமும் வைப்பு நிதியை renew செய்ய வேண்டும். இதில் அந்தக் கவலை கிடையாது.

4. வைப்பு நிதியை ஒரு வருடத்திற்கு என நினைத்து போடுகிறீர்கள். ஏதோ அவசரத்திற்கு அதை 3 மாதங்களில் எடுத்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும். பரஸ்பர நிதியில் அப்படி இல்லை. தினமும் சிலர் பணம் போடுவார்கள், சிலர் பணம் எடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் சில வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்படும், சில வைப்பு நிதிகள் (mature ஆனவை) முடிக்கப்படும். முடிக்கப்பட்ட நிதியில் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். எல்லோருக்கும் ஓரளவு நல்ல வட்டி வரும்.

ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதனால் பெரிய லாபம் இல்லை என்பதால், நான் இதை வலியுறுத்தவில்லை.
பின் குறிப்பு
இதிலேயே short-term, long-term , very short term (liquid) என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இவை இன்னும் நுணுக்கமான வித்தியாசங்கள் கொண்டவை. கடைசியில் வருவாயை பார்த்தால் பெரிய வித்தியாசம் இருக்காது. பல கோடி ரூபாயை fixed deposit இல் போட விரும்புவர்கள்தான் அந்த நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லை.

Tuesday, March 25, 2008

பரஸ்பர நிதி - கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&A part 2)

4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே?

5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்?


இரண்டுக்கும் சேர்த்து சற்று விரிவான பதில்.

பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் தருவதற்கும், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதற்கு முன்பே, பங்கு வாங்குவது தேவையற்றது, நல்லதல்ல என்ற எனது கருத்தை, காரணங்களுடன் கூறி இருக்கிறேன். எப்படியோ, உங்களிடம் Infosys போன்ற நிறுவனங்களின் பங்கு (share or equity) இருந்தால், சில சமயங்களில் அந்த நிறுவனம் டிவிடெண்ட் என்று கொஞ்சம் பணத்தை அனுப்பும். அது லாபத்தில் கொஞ்சம் பகுதியை உங்களுடன் பகிர்வது போல. இதனால் பங்கின் விலை ஏறவோ இறங்கவோ செய்யாது.

ஆனால், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட் என்பது, உங்கள் பணத்தையே உங்களுக்கு திருப்பித் தருவதாகும். உதாரணமாக, நீங்கள் பரஸ்பர நிதிக்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும். பத்து வருடங்களுக்கு முன் 1998ல் 10,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 20,000 ரூபாய். இதில் 5000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விற்றுவிட்டால், உங்களிடம் கையில் 5000 ரூபாய் பணமாகவும் (cash) மீதி 15000 ரூபாய் தங்கமாகவும் இருக்கும்.

அதைப்போலவே, பரஸ்பர நிதியில் உங்கள் முதலீடு 10000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர்கள் உங்களுக்கு 2000 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், உங்கள் பரஸ்பர நிதியின் மதிப்பு 8000 ரூபாயாகக் குறைந்துவிடும். இப்பொழுது 8000 ரூபாய்க்கு பரஸ்பர நிதியும், 2000 ரூபாய் பணமாகவும் (cash) இருக்கும்.

பலரும் இதை உடனடியாக உணர்வது இல்லை. டிவிடெண்ட் கொடுத்த பின், பரஸ்பர நிதியின் மதிப்பு குறையும். உதாரணமாக, NAV (net asset value) என்பது டிவிடெண்டுக்கு முன் 15 ரூபாய் என்று இருந்தால், 2 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்த பிறகு 13 ரூபாய் ஆகிவிடும். உங்களிடம் இருக்கும் யூனிட்டின் எண்ணிக்கை மாறாது. நீங்கள் அதை மட்டும் பார்த்தால், ”டிவிடெண்ட் வந்து விட்டது, அதே அளவு யூனிட்டும் இருக்கு” என்று மகிழ்வார்கள்.

உங்கள் பணத்தில் ஒரு பகுதியை, உங்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்ன பயன்? வேண்டும் என்றால் நீங்களே உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை விற்று காசாக்கலாமே? எதற்கு இந்த டிவிடெண்ட்?

இது சரியான கேள்வி. பெரும்பாலானவர்களுக்கு, பெரும்பாலான் சமயங்களில் இந்த டிவிடெண்டால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான், நீங்கள் வாங்கும் பரஸ்பர நிதி growth option எனப்படும் டிவிடெண்ட் இல்லாத முறையிலேயே வாங்கவேண்டும்.

எந்த சமயத்தில் யாருக்கு இந்த பரஸ்பர நிதி டிவிடெண்டினால் பயன்?
பங்கின் மூலம் வந்தாலும், பரஸ்பர நிதிமூலம் வந்தாலும் உங்களுக்கு வரும் டிவிடெண்ட் சட்டப்படி வரிவிலக்கு பெற்றது.

நீங்கள் பரஸ்பர நிதியை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால், அதில் வரும் லாபத்திற்கு 10 % வரி கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் விற்றால், முழு வரி விலக்கு. ஆனால், நீங்கள் நிதி வாங்கி 6 மாதத்தில் டிவிடென்ட் வந்தால் அதற்கு வரி விலக்கு. இந்த நிலையில் டிவிடெண்ட் option எடுத்து இருப்பவர் வரி கட்ட மாட்டார். அதே சமயம், 6 மாதத்தில் பரஸ்பர நிதியை விற்பவர் வரி கட்ட வேண்டும்.

பலரும் வரி கட்டாததால், நடைமுறையில் இந்த வித்தியாசம் கூட இருப்பதில்லை.

எனது கருத்துப்படி பரஸ்பர நிதியை மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருக்கும் எண்ணம் இருந்தால், முழு வரிவிலக்கை எப்படியும் அனுபவிப்பீர்கள். அதனால் டிவிடெண்டால் பயனில்லை.

இன்னமும் சில நுணுக்கமான subtle விவரங்கள் உண்டு. ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லை. கடைசியில் உங்கள் வருவாயை அவை அதிகம் பாதிக்காது. அதனால் அவற்றை சொல்லி உங்களை குழப்பாமல் விட்டு விடுகிறேன் :-)