Friday, March 21, 2008

நிதித் திட்டமிடுதல் -3. வருமானம் (Financial Planning, Returns)

நாம் ஒவ்வொரு வகை முதலீட்டிலும் வெவ்வேறு அளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
பணத்தை எவ்வளவு விரைவில் எடுக்கலாம் என்பதையும் பார்ப்போம். பணத்தை விரைவில் எடுக்க முடிந்தால், அது அவசரத்திற்கு உதவும்.

  1. வங்கி சேமிப்பு. இதில் தற்போது 3.5 சதவிகித்ம் கிடைக்கும். இது கொஞ்சம் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் இது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதாவது இன்று 100 ரூபாய் போட்டால், ஒரு வருடம் கழித்து 103.5 ரூபாய் கிடைக்கும். பணத்தை தேவைப்பட்ட பொழுது உடனே எடுத்து விடலாம்.

  2. வங்கி வைப்பு நிதி. இது தற்போது 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை கிடைக்கும். சில தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் நல்ல வட்டி கொடுக்கின்றன. ஆனால், பாதுகாப்பு கருதி அரசு உடைமையாக்கப் பட்ட அல்லது பெரிய தனியார் வங்கிகளில் பணம் போடுவது நல்லது. பணத்தை தேவைப்பட்ட உடனே (சில மணிகள்,அல்லது விடுமுறை நாளாக இருந்தால், அல்லது அதிகம் பணம்தேவை இருந்தால், ஓரிரு நாட்களில்) எடுத்து விடலாம். இந்த வட்டி சதவிகிதம் மாறும் வாய்ப்பு உள்ளது. இது 3 சதவிகிதமாக குறையலாம் அல்லது 14 சதவிகிதமாக மாறலாம்.


  3. பரஸ்பர நிதி. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் நாம் 15 சத விகிதம் முதல் 30 சதவிகிதம் வரை எதிர்பார்க்கலாம். சமயத்தில் இது 30 சதவிகிதம் இழப்பாகவும் மாறலாம். ஆனால் லாபம் சம்பாதிக்க, நாம் பல வருடங்கள் காத்து இருக்க தயாராக இருக்க வேண்டும். நமக்கு உடனடியாக அல்லது ஒரு வருடத்தில் தேவைப்படும் பணத்தை இந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக் கூடாது. குறைந்த பட்சம் 3 வருடங்கள் தேவை இல்லை என்ற பணத்தை இதில் முதலீடு செய்யலாம். அப்போதுதான் லாபம் வரும் என்று (ஏறக்குறைய) உறுதியாக சொல்ல முடியும். அதற்கு குறைவான கால கட்டத்தில் லாபமும் இருக்கலாம், நட்டமும் இருக்கலாம். இதை விற்று பணமாக்க 3 அல்லது 4 நாட்கள் ஆகலாம் ஆனால் என்ன பிரச்சனை என்றால்:
    • இப்போது உங்களுக்கு பணம் தேவை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வைப்பு நிதியில் பணம் போடாமல் எல்லாவற்றையும் பங்குகளில் போட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

    • இப்போது மார்க்கெட் சரிந்து இருப்பதால், உங்களுக்கு 10 சதவிகிதம் இழப்பாக இருக்கலாம். இன்னம் ஒரு மாதம் காத்திருந்தால் அது 20 சதவிகித லாபமாக மாறக்கூடும். ஆனால் உங்களுக்கு பணத் தேவையால் நீங்கள் இப்போதே விற்கும் நிலைமைக்கு தள்ளப் படுகிறீர்கள்.

    • அதனால் இது நினைத்தால் 3 அல்லது 4 நாட்களில் பணமாக்க முடியும் என்றாலும், இதன் மதிப்பு விரைவில் அதிகம் கூடும் என்ற நம்பிக்கையாலும், தற்போது நட்டம் என்பதாலும், நீங்கள் விற்க தயங்குவீர்கள். அல்லது விற்றாலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை

    • மார்க்கெட் உயர்ந்து இருந்தால் உடனே விற்க (தேவைப்பட்டால்) தயங்க மாட்டீர்கள். அதனால் நீங்கள் விற்பது மார்க்கெட்டை பொறுத்தும் இருக்கிறது. 'நினைத்த போது விற்கலாம்' என்றாலும் மார்க்கெட் கீழிருக்கும்பொழுது ‘விற்க வேண்டும் என்று நினைக்கவே' தயங்குவோம்.

    • வைப்பு நிதியில் அந்த பிரச்சனை இல்லை. ஒரு மாதம் கூட வைத்திருந்தால், கொஞ்சம்தான் லாபம்.


  4. தங்கம்/வெள்ளி. இதில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை லாபம் இருக்கலாம். இதுவும் கொஞ்சம் ஏறி இறங்கும் தன்மை உடையது. அதனால் ஓரிரு வருடங்கள் வரை தேவை இல்லாத பணத்தைதான் இதில் போட வேண்டும். அதற்குள் தேவைப்பட்டால், fixed deposit எனப்படும் வைப்பு நிதியில் போட வேண்டும். இதை காசாக வைத்திருந்தால், விற்று பணமாக்க சில நாட்கள் தேவை. பரஸ்பர நிதியாக வைத்திருந்தால், 3 அல்லது 4 நாட்களில் பணம் கைக்கு வந்து விடும்.

  5. நிலம்/வீடு. நாம் குடியிருக்க சொந்த வீடு இருப்பது பலருக்கும் மனதிற்கு நிம்மதி அளிக்கும். அப்படிப் பட்டவர்கள் இதை வாங்கிவிட வேண்டும். அதற்கு மேல் வீடு அல்லது நிலத்தை முதலீடாக வாங்குபவர்கள், பல வருடங்கள் காத்திருந்தால் ஆண்டுக்கு 20 சதவிகிதம் வரை லாபம் வரும். நடுநடுவில் அதைவிட அதிகமாகவும் போகலாம். அல்லது, இழப்பாகவும் போகலாம். ஆனால் 10 வருடம் காத்திருக்க தயார் என்றால் இது நல்ல முதலீடு.இதை அவசரத்திற்கு விற்க நினைத்தால் ஓரிரு மாதங்களும், நல்ல விலைக்கு விற்க நினைத்தால் ஒரு வருடம் வரையும் தேவைப்படும்




(சில பதிவுகளுக்கு பிறகு: 20ஆயிரம் சம்பளம் வாங்கும் 30 வயது ஆன ஒருவர் எப்படி திட்டமிடவேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஒரு உதாரணம் பார்ப்போம். அவருக்கு 60,65 வயது பெற்றோர் இருக்கிறார்கள். ஒரு(?) மனைவி, ஒரு குழந்தை. பிறகு, வேறு சில உதாரணங்களையும் பார்ப்போம்.)

அடுத்து இதுவரை பார்த்ததன் சுருக்கத்தையும், சில கேள்வி பதில்களையும் பார்க்கலாம்.

2 comments:

Anonymous said...

Nalla muyarchi.vazhthukkal

S. Ramanathan said...

நன்றி சுடரொளி.