Thursday, October 9, 2008

பங்கு சந்தை - அக்டோபர் 08 நிலவரத்தில்

பங்கு சந்தை இப்போது BSE 11,000 ரேஞ்சில் இருக்கிறது, இது 20,000 இலிருந்து ஏறக்குறைய பாதிக்கு வந்து விட்டது. பங்கு சந்தையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் பணம் போட்டவர்கள் எல்லோருக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் என்ன செய்வது?

அடுத்த சில மாதங்களில் பங்கு சந்தை இன்னும் கீழே இறங்குமா, அல்லது மேலே போகுமா, இல்லை இதே லெவலில் இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரை, இந்தியாவில் இருக்கும் நல்ல வியாபாரம் செய்யும் கம்பெனிகள், இன்னும் 3 ஆண்டுகள், அல்லது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் முன்னேறி இருக்கும் என்றுதான் நம்புகிறேன். (எ.கா. ITC, Infosys, SBI, Reliance). இவற்றில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

உங்களிடம் இன்னமும் சேமிப்பு நிறைய இருந்தால்: கொஞ்சம் கொஞ்சமாக, முதலீடு செய்ய இது நல்ல தருணம். நிலமை இப்படியே நீடித்தால், வெளியே கடன் வாங்குவது இன்னமும் சிரமமாகிவிடும். இதை மனதில் வைத்து, மிச்சம் இருப்பதைக் கொண்டு பரஸ்பர நிதி வாங்கலாம்.

அவ்வளவாக பணம் இல்லை என்றால்: ஏற்கனவே பரஸ்பர நிதியில் போட்ட பணத்தை வெளியில் எடுக்க வேண்டாம். மார்க்கெட் மேலே போகும்போது “பங்கு வாங்க வேண்டும்” என்றும் , கீழே போகும்போது “ விற்று விடுவோம், நஷ்டமாவது குறையும்” என்றும் நினைப்பது இயற்கை. இந்த இயற்கை உணர்வை செயல்படுத்தினால், வருவது நஷ்டம்தான்!

அமெரிக்காவில் பங்கு சந்தையில் பல கோடிகள் சம்பாதித்த வாரன் பஃபே (Warren Buffet) சொல்வதை நினைவு படுத்துகிறேன். ‘ எல்லோரும் பேராசைப் படும்பொழுது, பயப்படுங்கள். எல்லோரும் பயப்படும்பொழுது, பேராசைப் படுங்கள்' ( Be fearful when others are greedy, be greedy when others are fearful).
இது எல்லோரும் பயப்படும் தருணம். பேராசைப் பட வேண்டாம், தைரியமாகவாவது இருக்க வேண்டும்.

பின் குறிப்பு: நிதித் திட்டமிடுதல் பதிவுகளை எழுதுவதை நிறுத்திய போதிலும், மார்க்கெட் விழும் சமயத்தில் இது தேவை என்றே தோன்றியது. அதனால்தான் இந்தப் பதிவு.