Thursday, October 9, 2008

பங்கு சந்தை - அக்டோபர் 08 நிலவரத்தில்

பங்கு சந்தை இப்போது BSE 11,000 ரேஞ்சில் இருக்கிறது, இது 20,000 இலிருந்து ஏறக்குறைய பாதிக்கு வந்து விட்டது. பங்கு சந்தையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் பணம் போட்டவர்கள் எல்லோருக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் என்ன செய்வது?

அடுத்த சில மாதங்களில் பங்கு சந்தை இன்னும் கீழே இறங்குமா, அல்லது மேலே போகுமா, இல்லை இதே லெவலில் இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரை, இந்தியாவில் இருக்கும் நல்ல வியாபாரம் செய்யும் கம்பெனிகள், இன்னும் 3 ஆண்டுகள், அல்லது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் முன்னேறி இருக்கும் என்றுதான் நம்புகிறேன். (எ.கா. ITC, Infosys, SBI, Reliance). இவற்றில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

உங்களிடம் இன்னமும் சேமிப்பு நிறைய இருந்தால்: கொஞ்சம் கொஞ்சமாக, முதலீடு செய்ய இது நல்ல தருணம். நிலமை இப்படியே நீடித்தால், வெளியே கடன் வாங்குவது இன்னமும் சிரமமாகிவிடும். இதை மனதில் வைத்து, மிச்சம் இருப்பதைக் கொண்டு பரஸ்பர நிதி வாங்கலாம்.

அவ்வளவாக பணம் இல்லை என்றால்: ஏற்கனவே பரஸ்பர நிதியில் போட்ட பணத்தை வெளியில் எடுக்க வேண்டாம். மார்க்கெட் மேலே போகும்போது “பங்கு வாங்க வேண்டும்” என்றும் , கீழே போகும்போது “ விற்று விடுவோம், நஷ்டமாவது குறையும்” என்றும் நினைப்பது இயற்கை. இந்த இயற்கை உணர்வை செயல்படுத்தினால், வருவது நஷ்டம்தான்!

அமெரிக்காவில் பங்கு சந்தையில் பல கோடிகள் சம்பாதித்த வாரன் பஃபே (Warren Buffet) சொல்வதை நினைவு படுத்துகிறேன். ‘ எல்லோரும் பேராசைப் படும்பொழுது, பயப்படுங்கள். எல்லோரும் பயப்படும்பொழுது, பேராசைப் படுங்கள்' ( Be fearful when others are greedy, be greedy when others are fearful).
இது எல்லோரும் பயப்படும் தருணம். பேராசைப் பட வேண்டாம், தைரியமாகவாவது இருக்க வேண்டும்.

பின் குறிப்பு: நிதித் திட்டமிடுதல் பதிவுகளை எழுதுவதை நிறுத்திய போதிலும், மார்க்கெட் விழும் சமயத்தில் இது தேவை என்றே தோன்றியது. அதனால்தான் இந்தப் பதிவு.

Tuesday, July 1, 2008

நிதித்திட்டமிடுதல் முடிவுரை (Financial Planning. End)

இதுவரை நிதி திட்டமிடுதல் பற்றி எனக்கு தெரிந்த விவ்ரங்களை, சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இதில் வேறு விஷயங்கள் பெரிதாக இல்லை. அதனால் இத்துறையில் மேலும் பதிவுகள் வராது.

மற்ற படி, மார்க்கெட் நிலை மேலும் கீழும்தான் போய்க்கொண்டு இருக்கும். தற்போதைக்கு மிகவும் கீழே இருக்கிறது. அதனால் உடனே பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. (எப்பொழுதும் போல) மாதா மாதம் கொஞ்சம் தொகையை நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். சில வருடங்களுக்கு அதை விற்பது பற்றி யோசிக்க வேண்டாம்.

நான் ”எந்த பரஸ்பர நிதியை வாங்கலாம்” என்ற பதிவில் ‘நல்ல பரஸ்பர நிதிகள்' என குறிப்பிட்டு சிலவற்றை தொகுத்திருக்கிறேன். அவற்றை மட்டும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, மாற்றம் இருந்தால் பதிவாக எழுதப் போகிறேன். மற்றபடி இத்துறையில் பதிவு எழுத விஷயம் இல்லை.

Saturday, June 21, 2008

நிதித் திட்டமிடுதல்.எடுத்துக்காட்டு 2 மற்றும் 3

எடுத்துக்காட்டு 2: இந்த எடுத்துக்காட்டில், வருவாய் அதிகம் இருக்கும் ஒருவர் எவ்வாறு திட்டமிடலாம் என்பதைப் பார்க்கலாம். ஒருவரது மாத வருமானம் ரூ 50,000 (வரி போன பிறகு) என்று வைத்துக் கொள்வோம்.

இவரது வரவு செலவு கணக்கானது தோராயமாக:இவர்களுக்கு மாத செலவு. உணவு 5000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 10000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 5000 ரூபாய் போடுகிறார். மாதம் 20,000 ரூபாய் வங்கிக் கடன் (வீட்டுக் கடன்) கட்டுகிறார். மீதி 10,000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம். ஆனால் இதிலிருந்து வருடா வருடம் 50,000 ரூபாய் யூலிப் (ULIP) என்ற இன்சூரென்ஸ் மற்றும் பரஸ்பர நிதி சேர்ந்த திட்டத்தில் போடுகிறார். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்படி பணம் போட்டிருக்கிறார், மேலும் 18 ஆண்டுகள் போடவேண்டும்.


வங்கி சேமிப்பு 2 லட்சம். தங்கம் (நகைகள்) 20 பவுன்,இதன் மதிப்பு சுமார் 1.6 லட்சம். இவர் எப்படி திட்டமிடவேண்டும், முதலீடு செய்ய வேண்டும்?

முதலில் இவர் வைப்பு நிதியில் 1 லட்சம் அல்லது 1.5 லட்சம் போட வேண்டும். எல்லாம் சேமிப்பு (savings account) கணக்கில் இருந்தால், சில சமயம் அத்தியாவசியம் இல்லாத செலவில் இது கரைய வாய்ப்பு உள்ளது. வைப்பு நிதியில் இருந்தால், அதை ‘உடைத்து' பணத்தை வெளியே எடுக்க கொஞ்ச நேரம் ஆகும். அப்போது, நாம் ‘இது தேவைதானா?' என்று யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சேமிப்பு நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து வைப்பு நிதியில் போட வேண்டும். அடுத்து ஓரிரு வருடங்களில், இந்த வைப்பு நிதி அளவை 2 அல்லது 4 லட்சமாக அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு:இப்போது பல வங்கிகளில், வைப்பு நிதியையும் சேமிப்பு கணக்கையும் லின்க் செய்ய வழி உள்ளது. என்னைக் கேட்டால், அப்படி செய்ய வேண்டாம் என்று சொல்வேன். வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை 'அவசர தேவைக்கு' (real emergency need) அல்லது திட்டமிட்ட செலவுக்கு (planned expense, like downpayment for a house) மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் எல்.சி.டி. டி.வி.யை எக்சேன்ஜ் செய்து பிளாஸ்மா டி.வி. வாங்க, வைப்பு நிதியை உடைக்கக் கூடாது. வைப்பு நிதியையும், சேமிப்பு கணக்கையும் லின்க் செய்தால், தவறாக செலவு செய்வது சுலபமாகிவிடும்.

அடுத்து, ULIP இல் பணம் போடுவது தவறு என்பது என் கருத்து. சரி, தலையைக் கொடுத்தாகி விட்டது, அடுத்து என்ன செய்வது? நாம் முதலீடு செய்த ULIPஇன் terms and conditionsஐ படிக்க வேண்டும். பல சமயங்களில், ”3 வருடம் கழித்து விலகிக் கொண்டால், ஓரளவு பயன் கிடைக்கும், அதற்கு முன் விலகினால் எல்லாமே கோவிந்தா” என்று இருக்கும். அப்படி இருந்தால், இன்னம் ஒரு வருடம் பணம் கட்டி, அதன் பின் விலகி விட வேண்டும்.

அதன் பின்னர், Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். இதன் செலவு மிகக் குறைவாக இருக்கும். 10 லட்சத்திற்கு வருடத்திற்கு 3000 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இதில் அடுத்த வருடம் நீங்கள் இறந்தால் உங்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் கிடைக்கும், இல்லாவிட்டால் 3000 ரூபாய் போய்விடும். மறுபடி 3000 கட்ட வேண்டும், 2ம் வருடம் நீங்கள் இழந்தால் 10 லட்சம் வீட்டிற்கு, இல்லாவிட்டால் 3000 நிறுவனத்திற்கு.

பிறகு, ULIPஇல் போடாமல் மிச்சமிருக்கும் பணத்தையும், மாத சேமிப்பையும், நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இது 50000-3000 = 47,000 / year + 10,000 / month. அதாவது, சுமார் ஒவ்வொரு மாதமும் 14,000 சேமிக்க முடியும். இது எல்லாவற்றையும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக்கூடாது. முன்பு பார்த்தது போல கொஞ்சம் பணத்தை (உதாரணமாக பாதி சேமிப்பை) சேமிப்பு கணக்கில் வைத்து, 1 லட்சம் சேர்ந்ததும் வைப்பு நிதியில் போட வேண்டும். மீதியை, மாதா மாதம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை எல்லா பணத்தையும் சேர்த்து பரஸ்பர நிதி வாங்கக் கூடாது.

இவரது பிற்கால செலவுகள் என்று பார்த்தால், மகன்/மகளது திருமண/கல்வி செலவுகள், மற்றும் இவர் ரிடையர் ஆன பிறகு இருக்கும் செலவுக்கு பணம் ஆகிய இரண்டுதான். வீடு, இவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

இவரது மாத சேமிப்பான 14,000 வைத்து முதலீடு செய்தால் பிற்காலத்தில் எவ்வளவு பணமாக வரும்? வைப்பு நிதியில் மாதம் 7,000 (அதாவது வருடம் சுமார் 85,000 என்று வைத்துக் கொள்வோம்), மற்றும் பரஸ்பர நிதியில் மாதம் 7,000 போடுகிறார். வைப்பு நிதிக்கு 8% வட்டி என்றும், பரஸ்பர நிதியில் 15% வருமானம் என்றும் வைத்துக் கொள்வேம். இதே கணக்கில் சென்றால், 15 வருடங்கள் கழித்து, இவரிடம் வைப்பு நிதிமூலம் 24 லட்சமும், பரஸ்பர நிதி மூலம் 47 லட்சமும் இருக்கும். மொத்தமாக 71 லட்சம் இருக்கும்.

இது தவிர, 15 வருடத்தில் வீட்டுக்கடன் முழுவதும் அடைத்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டிற்கு கட்டும் பணம் மிச்சம். 15 வருடங்களில் வருமானமும், செலவும் அதிகரித்திருக்கும். சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவரது குழந்தைகளின் கல்லூரி மற்றும் திருமண செலவுகளை சமாளிப்பது சுலபமாகவே இருக்கும்.



எடுத்துக்காட்டு 3:
வருமானம் மிகக் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்யலாம்? உங்கள் மாத வருமானம் 5,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் இருந்தால், இதை வைத்து நிறைய சமாளிப்பது கடினம். பெரும்பாலும், நண்பர்களுடன் சேர்ந்து ரூம் போட்டு தங்கி இருப்பீர்கள்.
  1. நீங்கள் வெளியே கடன்வாங்காமல் சமாளிப்பதையே முதல் வேலை. அடுத்து, வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும்.

  2. கணிப்பொறி பற்றி படித்தோ,அல்லது உங்கள் துறையில் மேல் படிப்பு படித்தோ, ஏதாவது ஒரு வழியில், மாத சம்பளத்தை 10,000 ஆகவாவது உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் சிக்கனமாக இருந்தாலும் போதுமான அளவு சேமிக்க முடியாது.

  3. சேமிப்பு 25,000 அல்லது 30,000 என்று உயர்ந்த பிறகு, அதிலிருந்து 20,000 அல்லது 25,000 ஐ வைப்பு நிதியில் போட வேண்டும். இது அவசரத்திற்கு ஓரளவாவது உதவும்.

  4. நீங்களூம் Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு எடுத்தால், வருடத்திற்கு 1,500 ரூபாய் ஆகலாம். நிச்சயமாக இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும்.

  5. அதன் பிறகு முடிந்தால், மாதம் 500 ரூபாய் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது 1000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். 'பரஸ்பர நிதியானது, பணக்காரர்களுக்கு மட்டுமே சரியானது, நமக்கு சரி வராது' என்ற எண்ணம் வேண்டாம். அது தவறான் எண்ணம்.
  6. இப்படி பரஸ்பர நிதியில் போடும் பணத்தை குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு எடுக்கக் கூடாது. மேலும்பல வருடங்களுக்கு விட்டு வைப்பது, அந்த முதலீடு வளர வழிவகுக்கும்

  7. மாத வருமானம் நன்றாக உயரும் வரை, சென்னையில் வீடு வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் சொந்த ஊரில் குறைந்த விலையில் வீடு கிடைத்தால், அது வேறு விஷய்ம். அதற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு, கடன் வாங்கி சில வருடங்களில் அடைத்து விட முடிந்தால் பரவாயில்லை. “இல்லை, நான் சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறேன்” என்றால் வருமானத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை

Monday, May 26, 2008

பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds - SIP)

பரஸ்பர நிதியை வாங்கும் பொழுது ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யக் கூடாது. (இந்த இடத்தில் பங்குகளில் முதலீடு செய்யும் Equity based mutual funds மற்றும் கலப்பு நிதி எனப்படும் hybrid funds or balanced funds ஆகியவற்றை மட்டுமே சொல்கிறேன். Debt funds எனப்படும் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யலாம்.) எந்த நிதியை வாங்கலாம் என்று முடிவு செய்த பிறகு, முதலீடு செய்யப்போகும் அளவைப் பொறுத்து சுமார் 6 மாதம் அல்லது 1 வருடம் அல்லது 2 வருடமாக அதை மாதா மாதம் சிறிய தொகையில் முதலீடு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யாமல் இருக்கிறீர்கள். நண்பர்கள் சொல்லியோ அல்லது செய்தித்தாளில் படித்தோ, ‘நாமும் முதலீடு செய்வோம்' எனத் தொடங்கி, கையில் இருக்கும் சேமிப்பில் ஒரு பாதியை முதலீடு செய்ய முடிவு செய்கிறீர்கள். உங்கள் சேமிப்பு சுமார் 2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு லட்சத்தை ஒரு நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன தவறு? அதை ஏன் மாதம் 10,000 ரூபாய் என்று 10 மாதங்களில் அல்லது மாதம் 5,000 ரூபாய் என்று 20 மாதங்களில் முதலீடு செய்ய வேண்டும்?


மார்க்கெட் மேலேயே போய்க்கொண்டு இருந்தால், மொத்தம் ஒரு லட்சத்தையும் இன்றே முதலீடு செய்வது நல்லது. அதில்தான் அதிக லாபம் கிடைக்கும். மார்க்கெட் கீழேயே போய்க்கொண்டு இருந்தால், அதில் முதலீடு செய்யவே கூடாது. பேசாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணத்தை போட்டு வைக்க வேண்டும்.

ஆனால் மார்க்கெட் சீராக மேலேயோ கீழேயோ போகாது. ஏறி இறங்கும் தன்மை (ஆங்கிலத்தில் volatility என்று சொல்லப்படும்) மார்க்கெட்டின் இயற்கை. அவ்வாறு ஏறி இறங்கும் வகையில் மார்க்கெட் செல்லும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நல்லது. இதற்கு Systematic Investment Plan அல்லது SIP என்று பெயர்.

இதனால் இரண்டு பயன்கள் உண்டு.
  • மார்க்கெட் அதிகமாகப் போகும்பொழுது, பரஸ்பர நிதியில் விலையும் அதிகமாக இருக்கும் (50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்). அப்போது ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதில் 20 பரஸ்பர நிதி யூனிட்டுகள் கிடைக்கும்.


  • அடுத்த மாதம் மார்க்கெட் 20% விழுந்தால், இந்த பரஸ்பர நிதியும் 40 ரூபாய் ஆகிவிடும். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு 25 யூனிட்டுகள் கிடக்கும்.


  • மூன்றாம் மாதம் மார்க்கெட் பழைய நிலைக்கு வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். பரஸ்பர நிதியின் விலையும் 50 ரூபாய் ஆகிவிடும்.


  • இப்போது, உங்கள் மொத்த செலவு 2 மாதத்திற்கு 2,000 ரூபாய். உங்களிடம் இருக்கும் யூனிட்டுகள் 45 ஆகும். அதன் மொத்த மதிப்பு 2250 ரூபாய். நிகர லாபம் 250 ரூபாய்.
    மொத்தமாக முதலீடு செய்து இருந்தால், லாபமோ நட்டமோ இருக்காது.


  • இதற்கு பதிலாக வேறு ஒரு எடுத்துக் காட்டையும் காணலாம். முதல் மாதம் யூனிட்டின் விலை 40 ரூபாய், 2ம் மாதம் 50 ரூபாய், 3ம் மாதம் மீண்டும் 40 ரூபாய் என்று இருந்தால்?


  • மொத்தமாக முதலீடு செய்து இருந்தால் நட்டம் இருக்காது. SIP முறையில் செய்திருந்தால், 200 ரூபாய் நட்டம் இருக்கும். (45 யூனிட் * 40 ரூபாய் = 1800 ரூபாய்). அதனால் SIP எல்லா சமயங்களிலும் நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மார்க்கெட் பெரும்பாலும் ஏறி இறங்கியும், நீண்ட நாட்களில் ஏறுமுகமாகவும் (அதாவது 5 வருடம் கழித்து இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும்படி) இருந்தால், SIP முறையில் நல்ல லாபம் இருக்கும்.



இவ்வாறு நான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்திற்கு சென்றால், இந்தியாவில் இருக்கும் எல்லா பரஸ்பர நிதிகளுக்கும், SIP முறையில் முதலீடு செய்வதற்கும், மொத்தமாக முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடலாம்.

உதாரணமாக, Franklin Templeton Prima Plus G எனப்படும் பரஸ்பர நிதியில், 2004 ஜனவரி முதல் 2006 மே மாதம் வரை முதலீடு செய்தால், இப்போது SIP வகையில் 44%ம், மொத்த முதலீட்டில் (அதாவது எல்லா பணத்தையும் 2004 ஜனவரியில் முதலீடு செய்தால்) 35%ம் லாபம் இருக்கும் என்பதை பார்க்கலாம். இங்கு முதலீடு செய்யும் காலத்தை மாற்றி, 2007 மே வரை முதலீடு செய்திருந்தால், இப்போது SIP வகையில் 45%ம், மொத்த முதலீட்டில் 39%ம் லாபம் என்பதை பார்க்கலாம். இந்த தளம், பலவகையான பரஸ்பர நிதிகளில் எவ்வித வருமானம் வந்திருக்கும் என்பதை சுலபமாக கணக்கிட்டு காட்டுகிறது.

சில சமயங்களில் மொத்த முதலீடு அதிக லாபம் தரும் என்பதும் உண்மையே. ஆனால், அதற்கு சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். எது ‘சரியான நேரம்' என்பதை, அது முடிந்து சில வருடங்கள் ஆகும் வரை சொல்ல முடியாது. எனவே அது நாம் பழைய கதையைப் பேசத்தான் உதவுமே ஒழிய, இன்றோ நாளையோ முதலீடு செய்ய முடிவெடுக்க உதவாது.

SIP இல் இன்னோரு பயன் உண்டு. நம்மில் பலர், ஒழுங்காக மாதாமாதம் முதலீடு செய்வதில்லை. SIPஇல், ஆறு மாதத்திற்கு, அல்லது 1 வருடத்திற்கு காசோலைகளை எழுதி மொத்தமாக கொடுத்து விட வேண்டும். அல்லது வங்கியில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொள்ள பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் (ECS or Electronic Clearing Service). அதனால் ‘இந்த மாதம் மறந்துவிட்டேன்' என்ற பிரச்சனை கிடையாது. Regularity என்ற ஒழுங்குப்பாடு குறைந்தால், நாம் இழப்பவை பல. அவற்றில் நிதித்திட்டத்திலாவது ஒரு பாதுகாப்பாக அமைவது SIP முறை ஆகும்.

Monday, March 31, 2008

நிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning- Index)

இதுவரை எழுதிய பதிவுகளை கீழே தொகுத்திருக்கிறேன்.

  1. நிதி திட்டமிடுதல்-1 (தொடக்கம்) Financial Planning - Introduction

  2. நிதி திட்டமிடுதல்-2. பாதுகாப்பு, மற்றும் சேமிப்பை பங்கிடுதல் Financial Planning (Safety and Savings Distribution)
    • பல வகை முதலீடுகளில் எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றியும், சேமிப்பை எந்த முதலீடுகளில் எவ்வளவு போடலாம் என்பது பற்றியும் விவரங்கள்

  3. வருமானம் (வட்டி விகிதம்) (Returns and Liquidity)
    • ஒவ்வொரு முதலீட்டிலும் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம், எவ்வளவு சுலபமாக பணத்தை எடுக்க முடியும் என்பது பற்றிய விவரம்

  4. பரஸ்பர நிதி கேள்வி பதில் -1 (Mutual Funds Q&A -1)

  5. பரஸ்பர நிதி கேள்வி பதில் -2 (Mutual Funds Q&A -2)

  6. பரஸ்பர நிதி- வைப்பு நிதி (Debt Funds)
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  7. பரஸ்பர நிதி - செலவுகள் (Mutual Fund Expenes/Loads)

  8. பரஸ்பர நிதி - டிவிடெண்ட் மறு முதலீடு (Mutual Funds Dividend Reinvestment
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  9. பரஸ்பர நிதி. எதை வாங்குவது? சில சிபாரிசுகள். (Mutual Funds-What to buy? Recommendations)

  10. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1a (Financial Planning Example 1a)


  11. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1b (Financial Planning Example 1b)

  12. பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds. SIP)


தற்போதைக்கு இதுவே கடைசி பதிவு. 26th May 2008. மீண்டும் எழுத தொடங்கி விட்டேன். வேலை பளு அதிகமாவதால், மற்ற எடுத்துக்காட்டுகளை எல்லாம் எழுதவில்லை. எழுத விட்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக, கீழே.
கீழே பரஸ்பர நிதி என்பது, பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பரந்த பங்கு வாங்கும் பரஸ்பர நிதி (Diversified Equity Mutual Funds, investing primarily in large caps).

1. நீங்கள் இதுவரை பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதி மூலமோ பணம் முதலீடு செய்யவில்லை என்றால், பரஸ்பர நிதி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது. முதலில் உங்களுக்கு கடன் இருந்தால் அதை அடைக்கவேண்டும். வீட்டுக்கடன் மட்டும் விதிவிலக்கு. நீங்கள் 20 -30 வயதில் இருந்தால், சேமிப்பில் 60% பரஸ்பர நிதியிலும் 40% வைப்பு நிதி/பி.எஃப்.இஅல் போடவும். 30-40ல், 50% பரஸ்பர நிதியிலும் 50% வைப்பு நிதியிலும் போடவும். 40-50ல் , சேமிப்பில் 40% பரஸ்பர நிதியிலும், 60% வைப்பு நிதியிலும் போடவும். இந்த வயதில் அடுத்த தலைமுறைக்கான் செலவுகள் (கல்லூரி, திருமணம்) அதிகம் இருக்கும், நீங்கள் 20 லிருந்து 40 வயதில் முதலீடு செய்த பணம் இப்போது பயன்படும். அடுத்தக் கட்டத்தில் 50க்கு மேல் பரஸ்பர நிதியில் முதலீட்டை குறைந்து 20 அல்லது 30% போட்டால் நல்லது.

2. இப்போது உங்களிடம் கையில் நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் பரஸ்பர நிதியில் இது வரை பணம் போடவில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் முதலீடு செய்ய 10,000 மேல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் 5 மாதத்தில் போடவும். இது SIP (Systematic Investment Plan) எனப்படும். இதன் நன்மைகளைப் பற்றி பின்னர் சில மாதங்கள் கழித்து எழுதுகிறேன். உங்களிடம் 5 லட்சம் இருந்தால், மாதம் 20,000 வீதம் 2 வருடம் போடவும். ஒரே நாளில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் இப்பொழுது மொத்த சேமிப்பாக இருப்பதே 5000 ரூபாய்தான் என்றால் அதை ஒரு மாதத்தில் போடலாம். ஆனால் அடுத்த மாதம் முதல் சேமிப்பை அதிகரித்து மாதம் 1000ஆவது போட முயற்சி செய்யுங்கள்.

இது வரை படித்தவர்களுக்கும், கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

Sunday, March 30, 2008

நிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b

கணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்?

Recurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.

நாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்
நாட்கள் அல்லது காலம் (Number of Months, N) = 20 * 12 = 240 மாதங்கள்
வட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)

மாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)


சமன்பாடு

P = (T * i) / { (1+i)^^N -1 }

நமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,
மாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.

இங்கு நினைவில் கொள்ள வேண்டியது:

1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.
2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.
3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.
4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.


கீழே இருக்கும் அட்டவணையில், அவரது தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.


இவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.

இப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.

இவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியில் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.

ஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.

10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


சில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.

பலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.

வருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.

Saturday, March 29, 2008

பரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Reinvestment)

பரஸ்பர நிதியில் டிவிடெண்டை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. டிவிடெண்ட் 2. டிவிடெண்ட் மறு முதலீடு 3. குரோத் (வளர்ச்சி)

பரஸ்பர நிதிகள் எவற்றில் முதலீடு செய்யும் என்பதைப் பொறுத்து 'Diversified Equity Funds' (பரவலான பங்கு வாங்கும் நிதி), 'Debt Funds' (வைப்பு நிதி-பரஸ்பர நிதி), 'Balanced Funds or Hybrid Funds (கலப்பு நிதி, அதாவது பங்கில் கொஞ்சம் முதலீடு, வைப்பு நிதியில் கொஞ்சம் முதலீடு) என்றும் பிரிக்கலாம்.

டிவிடெண்ட் தரும்பொழுது எவ்வளவு வரும்?, நிதியை விற்கும் பொழுது எவ்வளவு வரும்? இவற்றிற்கு எவ்வளவு வரி? என்பது பரஸ்பர நிதியின் வகையைப் பொறுத்தது. நீங்கள் எவ்வளவு நாள் வைத்திருந்து விற்றீர்கள் என்பதையும் பொறுத்தது.

“எனக்கு இதெல்லாம் வேண்டாம், எது நல்லது என்பதை மட்டும் சொல்” என்றால், ‘குரோத் வகையை எடுங்கள், 3 வருடத்திற்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்' என்று சொல்வேன். நீங்கள் இந்தப் பதிவை தொடர்ந்து படித்து குழம்பிக்கொள்ள வேண்டாம்.

“சரி, இருந்தாலும் எனக்கு விவரங்கள் தெரிய வேண்டும். நான் குழம்பிக்கொள்ள மாட்டேன் (அல்லது குழம்புவது எனது உரிமை)” என்றால், தொடர்ந்து படிக்கவும்.



இங்கே முதலில் சுருக்கமாக அட்டவணையிலும், அதன் கீழே விளக்கமாகவும் கொடுக்கிறேன்.
அதில், சில சந்தர்ப்பங்களில் டிவிடெண்ட் முறையில் லாபம் அதிகம் என்பதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரோத் முறையில் லாபம் அதிகம் என்பதும் விளங்கும். எந்த சமயத்தில் டிவிடெண்ட் முறை லாபம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்பதும் விளங்கும்.

வருமான வரி விவரம் (Income Tax Details)








வகை எவ்வளவு நாள் முதலீடு (எப்போது விற்பனை, எப்போது வாங்கினீர்கள்) வருமான வரி
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபத்தில் 15%
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல் (நெடுங்காலம்) வரி இல்லை
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபம், உங்கள் சாதாரண வருமானத்துடன் சேர்க்கப்படும். வரி 0% முதல் 30% வரை போகலாம்
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல்(நெடுங்காலம்) லாபத்தில் 10 அல்லது 15% (பட்ஜெட்டிற்கு பிறகு சரியாகத் தெரியவில்லை)


டிவிடெண்ட் பற்றிய விவரங்கள்:




வகை டிவிடெண்ட் வரி
பங்கு பரஸ்பர நிதி வரி இல்லை
வைப்பு நிதி-பரஸ்பர நிதி மொத்த டிவிடெண்டில் 15% ***. லாபத்தில் அல்ல


***டிவிடெண்டில் 15% (சரியாகச் சொன்னால் 14.16%)வரி என்றால், உங்களுக்கு டிவிடெண்டு கொடுப்பதற்கு முன்னாலேயே, நிறுவனம் அரசுக்கு கட்டி விடும். உங்களுக்கு வரும் டிவிடெண்டுக்கு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம்.

கலப்பு நிதி, துறைசார் நிதி: இவற்றில் 65% மேல் பங்கில் முதலீடு செய்திருந்தால், அவை பங்கு பரஸ்பர நிதி என்று கருத்தப்படும். இல்லாவிட்டால் ‘வைப்பு நிதி-பரஸ்பர நிதி' என்று கருதப்படும். இதை வைத்தே வருமான வரியும், டிவிடெண்ட் வரியும் கணக்கிடப்படும்.

இப்படி வரும் டிவிடெண்டில் மீண்டும் பரஸ்பர நிதி வாங்கினால், “டிவிடெண்ட் மறு முதலீடு” (Dividend Reinvestment) என்று பெயர்.

டிவிடெண்ட் வேண்டாம், என்றால், ‘குரோத்' அல்லது வளர்ச்சி வகை பரஸ்பர நிதி ஆகும்.பெரும்பாலும் எல்லா நிதிகளிலும் டிவிடெண்ட் மற்றும் குரோத் வகைகள் உள்ளன. பல நிதிகளில் டிவிடெண்ட் மறு முதலீடும் இருக்கின்றன.

1. பரஸ்பர நிதியில் இரண்டு வகை (பங்கு பரஸ்பர நிதி, வைப்பு நிதி-பரஸ்பர நிதி).
2. அதற்கேற்றாற் போல டிவிடெண்டிற்கு வரி.
3. பரஸ்பர நிதியை விற்றால், லாபத்திற்கு எவ்வளவு வருமான வரி என்பது எந்த வகைப் பங்கு, எவ்வளவு நாள் கழித்து விற்றோம் என்பதைப் பொருத்தது.
4. பங்கு வகை பரஸ்பர நிதியின் மதிப்பு அடிக்கடி ஏறும், இறங்கும்.
5. டிவிடெண்ட் வருவதெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி. “எப்போ வரும், எவ்வளவு வரும்” என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் இதை சொல்ல முடியாது. Fund manager நினைத்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை.

இதை நினைவில் வைத்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு பரஸ்பர நிதி பங்கில் முதலீடு செய்கிறது. இன்று அதன் மதிப்பு ரூ 100. 6 மாதத்தில் 120 ஆகிறது. ஒரு வருடத்தில் 90 ஆகிறது. இரண்டு வருடத்தில் 150 ஆகிறது. மூன்றாவது வருடத்தில் 160 ஆகிறது. இது சகஜம்.

இதை குரொத்தில் வாங்கினால்: இதை மூன்று வருடம் கழித்து விற்றால் 60 ரூபாய் லாபம். இரண்டு வருடத்தில் விற்றால் 50 ரூபாய் லாபம். ஒரு வருட முடிவில் விற்றால் 10 ரூபாய் நட்டம். இவை எதற்கும் வருமான வரி கிடையாது.
ஆனால், 6 மாதத்தில் விற்றால் 20 ரூபாய் லாபம். அதில் 15% (அதாவது 3 ரூபாய்) வருமான வரி. மொத்தம் 17 ரூபாய் லாபம்.

இதை டிவிடெண்டில் வாங்கினால்: எப்போது டிவிடெண்ட் தருவார்கள் என்று சொல்ல முடியாது. வாங்கி ஒரு நாளில் 20 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக வைத்துக் கொள்வோம். உடனே உங்கள் பங்கின் மதிப்பு 100 லிருந்து 80 ஆகி விடும். உங்கள் டிவிடெண்டிற்கு டிவிடெண்ட் வரியோ வருமான வரியோ இல்லை.

6 மாதத்தில் 100 ரூபாய் குரோத் நிதி 120 ஆகி இருக்கிறது. 80 ரூபாய் டிவிடெண்ட் நிதி 96 ரூபாய் ஆகி இருக்கும். இப்போது விற்றால்?

உங்கள் லாபம் 16 ரூபாய். அதில் வரி 15% அதாவது 2.4 ரூபாய். விற்பதில் நிகர லாபம் 13.6 ரூபாய். முதலில் 20 ரூபாய் டிவிடெண்டும், இப்போது 80 + 13.6 ரூபாயும் கிடைக்கிறது.

அது மட்டும் இல்லை. நீங்கள் வாங்கிய பொழுது 100 ரூபாய் ஆனது, இப்போது 96 ரூபாய் என்பதால், 4 ரூபாய் நட்டம் என்று கணக்கு காண்பிக்கலாம். (இதற்கு ஒரு விதி இருக்கிறது. டிவிடெண்ட் வருவதற்கு 3 மாதம் முன்போ, அல்லது 3 மாதம் கழித்தோ விற்றால்தான் இப்படி கணக்கி காண்பிக்க முடியும். டிவிடென்ட் வருவதற்கு முந்திய நாள் வாங்கிவிட்டு, டிவிடெண்டை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் விற்று நட்டக்கணக்கு காண்பிக்க முடியாது).

வேறு வகையில் பங்கை விற்று உங்களுக்கு 4 ரூபாய் குறுகிய கால லாபம் வந்தால்,அதில் 15% வரி (0.6 ரூபாய்) கட்ட வேண்டி இருக்கும். இந்த நட்டத்தை வைத்து சரிக்கட்டினால், அந்த 0.6 ரூபாய் மிச்சமாகும். ஆக மொத்தம் 13.6 ரூபாய் நிச்சய லாபம், 14 ரூபாய் வரை லாபம் பார்க்க வழி உண்டு.

அப்படி இந்த வருடம் வேறு எதுவும் குறுகிய கால லாபம் இல்லை என்றால், அடுத்த வருடத்திற்கு இந்த 4 ரூபாய் நட்டத்தை எடுத்துச் செல்லலாம்.

இப்படி 6 மாதத்தில் விற்றால் குரோத்தில் 17 ரூபாயும், டிவிடெண்டில் 13.6 அல்லது 14 ரூபாயும் வருமானம் எனத் தெரிகிறது.


நீங்கள் 6 மாதத்தில் விற்காமல், 1 வருடத்தில் விற்றால்? 100 ரூபாய் 90 என ஆகிறது. 80 ரூபாய் 72 என ஆகும். இப்போது உங்கள் நட்டம் 8 ரூபாய் மட்டுமே. ஏனென்றால், முன்னர் 20 ரூபாய் டிவிடெண்ட்.இப்போழுது விற்றால் 72 ரூபாய். மொத்தம் 92 ரூபாய்.

இப்படி 1 வருடத்தில் விற்றால் குரோத்தில் 10 ரூபாய் நட்டம், டிவிடெண்டில் 8 ரூபாய் நட்டம்.

நீங்கள் 2 வருடத்தில் விற்றால்.(அதற்கு பின் டிவிடெண்ட் கொடுக்கவில்லை என நினைத்துக் கொள்ளவும்). 100 ரூபாய் 150 ஆனால், 80 ரூபாய் 120 ஆகும்.

குரோத்தில் 50 ரூபாய் லாபம். (வரி இல்லை). டிவிடெண்ட் வகையில் 120 + முதலில் வாங்கிய 20 ரூபாய் = 140. அதாவது 40 ரூபாய் லாபம் (இங்கும் வரி இல்லை).


நீங்கள் 3 வருடத்தில் விற்றால். 100 ரூபாய் 160 ஆனால் , 80 ரூபாய் 128 ரூபாய் ஆகும்.

குரோத்தில் 60 ரூபாய் லாபம். டிவிடெண்டில் 128+20 = 148. அதாவது 48 ரூபாய் லாபம்.

இப்படி பல நிலைமைகளை ஆராயலாம். நாலு மாதத்தில் 10 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், என்ன ஆகும்? அதே 10 ருபாய் இல்லாமல் 5 ரூபாய் கொடுத்தால் என்ன ஆகும்? பரஸ்பர நிதி ஒரு வருடத்தில் 120 ஆகுமா அல்லது 110 ஆகுமா?

மண்டையைக் குழப்பிக்கொள்ள இது சிறந்த வழி.


"இல்லை, குழம்பவில்லை” என்றால், அடுத்து வருவது டிவிடெண்ட் மறு முதலீடு.

போன உதாரணத்தில், உங்கள் டிவிடெண்டான 20 ரூபாயை அப்படியே வைத்துக் கொண்டு விட்டோம். அதையும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன ஆகும்? அது குரோத் போலவே வரும். இதற்கும் குரோத்திற்கும் வித்தியாசம் இருக்காது.

இங்கு உடனே (மறுநாளே) டிவிடெண்ட் தந்ததாக கற்பனை செய்தோம். அதற்கு பதில் 6 மாதம் கழித்து டிவிடெண்ட் தந்து அந்த டிவிடெண்டை மறு முதலீடு செய்தால்? அப்போது, முதலில் வாங்கிய யூனிட்டுகள் இன்று வாங்கியதாகவும், டிவிடெண்ட் மறு முதலீட்டில் வாங்கிய யூனிட்டுகள் 6 மாதத்தில் வாங்கியதாகவும் இருக்கும்.

எல்லாவற்றையும் 1 வருடத்தில் விற்றால்? முதலில் வாங்கிய யூனிட் லாபத்திற்கு ‘நெடுங்கால வரி' (பூஜ்யம்)யும் டிவிடெண்ட் மறு முதலீட்டில் வந்த யூனிட்டிற்கு ‘குறுகிய கால வரி' (15%)யும் கட்ட வேண்டும்.

இதை எல்லாம் பார்த்த பிறகு மூளையை சரியாக்க ஒரு சைக்காலஜிஸ்டையும், வருமான வரியைக் கட்ட ஒரு அக்கவுண்டண்ட்டையும் தேட வேண்டும். இதெல்லாம் தேவையா?



இதெல்லாம் வேண்டாம் என்றால், பங்கு-பரஸ்பர நிதியில் குரோத்தில் போடுவதுதான் நல்லது. சில வருடங்களுக்கு தொடக்கூடாது.


வைப்பு நிதி-பரஸ்பர நிதியில் போடுபவர்களுக்கும், அவர்கள் வருமான வரி நிலைமையைப் பொறுத்து டிவிடெண்ட் அல்லது குரோத் பொறுத்தமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இந்த வைப்பு நிதி பரஸ்பர நிதி தேவையில்லை என்பது என் கருத்து.