Sunday, March 23, 2008

பரஸ்பர நிதி - கேள்வி பதில் 1 (Mutual Funds. Q&A part 1)

1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்?”

பதில்: சில சமயங்களில் நீங்கள் நல்ல லாபம் கண்டிருக்கலாம். ஆனால் பல வருடங்களுக்கு அது தொடர வாய்ப்பு மிகக் குறைவு. நீங்கள் உங்கள் லாபத்தை, பங்கு-பரஸ்பர நிதியின் லாபத்துடன் பல ஆண்டுகள் compare செய்து பார்த்தால், நம்மில் ஏறக்குறைய அனைவருக்குமே லாபம் குறைவாகத்தான் வரும். ஒருவருக்கு ஓரிரு வருடங்களில் வந்த லாபத்தை வைத்து முடிவெடுக்கக் கூடாது.

நீங்கள் ஒரு ‘கிக்'கிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்து பங்கில் (Stock) இல் போடுங்கள், தவறில்லை. அதை முதலீடு என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பலரும், Los Vegas என்ற கேளிக்கை நகருக்கு சென்று கொஞ்சம் பணத்தை செலவிடுவார்கள். அதில் சூதாட்டம் (gambling machine) உண்டு. அதில் பணம் போட்டால் சில சமயம் கொஞ்சம் (அல்லது நிறைய்) பணம் கிடைக்கும். பெரும்பாலும் இழப்புதான் இருக்கும். பலரும் வருடத்தில் ஒரு நாள் இங்கு வந்து சுற்றிப்பார்த்து ரிலாக்ஸ் செய்து, சூதாட்டத்தில் விளையாடி,பல மணி நேரங்களில் 200 டாலர் அல்லது 500 டாலர் இழந்து அல்லது அதிசயமாக 200 டாலர் சம்பாதித்து வருவார்கள்.

இதைக் குறை சொல்லவில்லை. ஆனால் அது சம்பாதிக்கும் வழி என்று நினைத்தால்தான் பிரச்சனை. நீங்கள், ‘போனால் போகட்டும்' என்று ஒரு தொகையை எடுத்து, பங்கு வாங்கலாம். அது மேலே போனால் ஜாலி, கீழே போனால் பரவாயில்லை. உங்களுக்கு தேவை, அதை தினமும் பார்த்து 'கிக்' ஏற்படுவது. இந்த நோக்கில் பங்கு வாங்குவதோ அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்குவதோ தவறில்லை.

அதே சமயம் சூதாட்டத்தில் அளவுக்கு மீறி பணம் கட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே பங்கிலோ அல்லது துறைசார் பரஸ்பர நிதியிலோ ஆர்வக்கோளாறில் அதிகம் பணம் போடக்கூடாது.

இந்த வம்பே வேண்டாம் என்றால் லாஸ் வேகாஸ் பக்கமே போகக்கூடாது. அதாவது பங்கு அல்லது துறை சார் பரஸ்பர நிதி வாங்கவே கூடாது.

2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை?
ULIP என்பது நமது காப்பு நிதியில் (insurance) ஒரு பகுதியில் பரஸ்பர நிதி வாங்குவது. உங்களுக்கு தேவை காப்பு நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். பரஸ்பர நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். நீங்கள் தனியாக வாங்கினால், உங்களுக்கு தேவையான பரஸ்பர நிதியை வாங்கலாம். ULIP வாங்கினால், அவர்கள் இஷ்டத்திற்கு வாங்குவார்கள். அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றுவர்கள். அதில் இருக்கும் கமிஷனின் அளவு அதிகம்.

இது தவிர இந்த ULIP மாதிரி திட்டங்களில், “அடுத்த 20 வருடங்களுக்கு நான் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் ரூபாய் கட்டுவேன்” என்பது போல கையொப்பம் இடவேண்டி இருக்கும். உங்கள் வேலை மாறலாம், திடீர் என்று செலவு வரலாம். அப்போது கூட இந்த 20 ஆயிரத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிறைய இழப்பு.

ஆனால், நீங்களாக பரஸ்பர நிதி வாங்கினால், உங்களிடம் காசு இருந்தால் வாங்குவீர்கள். திடீரென்று தவிர்க்க இயலாத செலவு வந்தால் அந்த வருடம் பரஸ்பர நிதி வாங்க மாட்டீர்கள். இதனால் இழப்பு இல்லை. தேவையில்லாமல் அதிககாலத்திற்கு நாம் பணம் கட்டும் உடன்படிக்கையில் கையொப்பம் இடக்கூடாது.

NFO என்பது, புதிய பரஸ்பர நிதி. அதற்கும் பழைய பரஸ்பர நிதிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பழைய பரஸ்பர நிதியில் அது எப்படி returns தரும் என்பதை நாம் அறியலாம். புதிய நிதியில் அது கூடக் கிடையாது.

NFO 10 ரூபாய் என்றால் அது cheap என்று தவறான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இது உண்மை அல்ல. நீங்கள் 10 ரூபாய்க்கு வாங்கும் பங்கு ஒரு வருடம் கழித்து 15 ரூபாய் என்று மாறுவதாக வைத்துக் கொள்வோம். அதே போன்ற பழைய பரஸ்பர நிதி, முதலில் 120 ரூபாய் என்று இருந்தால், அது ஒரு வருடத்தில் 180 ரூபாய் ஆகி இருக்கும். எனவே, வருமானம் இரண்டிலும் 50%. பரஸ்பர நிதியில் அதன் தற்போதைய மதிப்பை வைத்து எடைபோடக் கூடாது. அது பங்கு போன்றது அல்ல.

3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது நிதி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே? அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்?

பரஸ்பர நிதியின் விலை என்பது நாம் வாங்கும் பொருளின் விலை போல இல்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். இங்கு பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளை குறிப்பாக பார்ப்போம். ஒரு பரஸ்பர நிதி எந்த பங்குகளில் முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்துதான் அது வளர்வதும், தேய்வதும் இருக்கும்.

நாம் சாதாரணமாக தங்கம் வாங்கினால் அதை அரை பவுன், ஒரு பவுன் என்று எடையில் வாங்கலாம். ஒரு பவுன் என்பது 8 கிராம். வெள்ளி என்பதை கட்டியாக வாங்கினால் 100 கிராம் என்று வாங்கலாம் என்று நினைக்கிறேன். தங்கத்தின் தற்போதைய விலை ஒரு கிராம் சுமார் 1000 ரூபாய். வெள்ளியின் தற்போதைய விலை ஒரு கிலோ சுமார் 30,000 ரூபாய்.
தங்கத்தின் விலை பத்து வருடங்களுக்கு முன் 1998இல் சுமார் கிராம் ஒன்றுக்கு 500 ரூபாய் என்றும் வெள்ளி விலை கிலோவிற்கு 10,000 ரூபாய் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளவும். தாமிரத்தின் விலை 1998ல் கிலோ 100 ரூபாய் என்றும் 2008இல் விலை குறைந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கிறது என்றும் கற்பனை செய்து கொள்ளவும். (கணக்கு சுலபமாக இருக்க விலையை கொஞ்சம் கூட்டி குறைத்து கொள்கிறேன். எங்கே தங்கம் கிராமுக்கு 1000 ரூபாயில் கிடைக்கிறது என்று கேட்க வேண்டாம்! தாமிரமோ அல்லது வேறு உலோகமோ விலை குறையவில்லை)


விலை 1998 2008
தங்கம் கிராம் ஒன்றிற்கு 500 1000
வெள்ளி கிலோவிற்கு 10000 30000
தாமிரம் கிலோவிற்கு 100 50 (விலை குறைந்து இருக்கிறது)


நீங்கள் கடையில் சென்று தங்கக் காசு வாங்க வேண்டும் என்றால் அதை அரை பவுன் அல்லது ஒரு பவுனாகத்தான் வாங்க முடியும் . இப்போது அரை பவுன் தங்கக் காசு வேண்டும் என்றால் 4 கிராம் = 4 * 1200 = 4800 ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஆயிரம் ரூபாய்க்கு தங்கக் காசை வெட்டிக் கொடு என்று கேட்டால், கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் நகைகள் ஒரு பவுன், அல்லது அரை பவுன் என்று இல்லாமல் வேறு அளவிலும் கிடைக்கும். (அதில் சேதாரம், செய்கூலி, கல் விலை என்று தீட்டி விடுவார்கள். ஆனால் இப்போதைய உதாரணத்தில் அவை எல்லாம் இல்லை என்று கற்பனை செய்து கொள்ளவும்).

நீங்கள் 1998இல் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நகை (தோடு) வாங்கி இருந்தால், அதில் 2 கிராம் தங்கம் இருக்கும். அதன் மதிப்பு இப்போது 2 * 1000 = 2000 ரூபாய்.
இப்போது கடைக்கு போனாலும் ஆயிரம் ரூபாய்க்கு தோடு கிடைக்கும். ஆனால், அதன் எடை 1 கிராம் தான் இருக்கும்.

தங்கம் விலை அடுத்த ஆண்டில் ஏறலாம் அல்லது இறங்கலாம். 10% ஏறும் என்று நாம் எதிர்பார்ப்போம். அப்போது பழைய தோடின் மதிப்பு 2200 ரூபாய் ஆகும். புதிய தோடின் மதிப்பு 1100 ரூபாய் ஆகும்.

பழைய தோடு நல்ல முதலீடா, புதிய தோடு நல்ல முதலீடா என்று கேட்டால் இரண்டும் சரி சமம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கும். இப்போதைய தோடு மலிவாகக் கிடைப்பதாகச் சொல்லலாமா? கூடாது. இதன் எடையும் குறைவு, அதனால் விலை குறைவும். புதிய தோடின் விலை 10% ஏறினால், பழைய தோடின் விலையும் 10% ஏறும். இவை இரண்டுமே தங்கத்தின் விலையைப் பொறுத்தது. இதை ஆங்கிலத்தில் underlying asset என்று சொல்வார்கள். தங்கத்தின் விலை இறங்கினால், இரண்டு தோடுகளின் மதிப்பும் இறங்கும்.

இதே 1998இல் 10 கிலோ தாமிரம் வாங்க 10 * 100 = 1000 ரூபாய் தேவை. அப்படி வாங்கி இருந்தால் அதன் மதிப்பு இப்பொழுது 500 ரூபாய் ஆகும். நீங்கள் இப்போது தாமிரக் கம்பி ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் 20 கிலோ கிடைக்கும். பழைய தாமிரக் கம்பி 500 ரூபாய் என்றால் அது மலிவு இல்லை. புதிய தாமிரக் கம்பி 1000 ரூபாய் என்றால் அது அதிக விலை இல்லை. இரண்டுக்கும் அடிப்படை பொருள் தாமிரமே.

இன்னும் சொல்லப்போனால், பழைய தாமிரம் விலை குறைவதால் அதை மலிவு என நினைத்து நாம் வாங்க மாட்டோம். மேலும் விலை குறையுமோ என பயந்து இனிமேல் தாமிரத்தில் முதலீடு செய்யக் கூடாது என்றுதான் நினைப்போம்.

பரஸ்பர நிதி என்பது நகை வாங்குவது போன்றது. தங்கக் காசு போல அரை பவுன் அல்லது ஒருபவுன் என்று வாங்கப் படுவதில்லை. ஆயிரம் ரூபாய்க்கு தோடு, 5000 ரூபாய்க்கு வளையல் என்று வாங்குவது போன்றது.

நீங்கள் 1998இல் உங்கள் காசை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது இரண்டு மடங்காக இருக்கும். வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் மூன்று மடங்காகி இருக்கும். தாமிரத்தில் செய்திருந்தால் பாதி இழப்பு இருக்கும்.

இந்த விவரங்களை வைத்து இப்போது நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எதில் செய்வீர்கள்? வெள்ளியில் செய்ய நினைப்போம். எல்லா பரஸ்பர நிதியிலும், “Past performance is not an indicator of future performance" “முன்பு விலை கூடியதால் இப்போதும் கூடும் என்று சொல்ல முடியாது” என்று எழுதி இருப்பார்கள். அது உண்மையே. ஆனால், முன்பே இழப்பான முதலீட்டில் நாம் மேலும் முதலீடு செய்ய மாட்டோம்.

இப்போது உங்களிடம் ஒருவர் வந்து ‘1000 ரூபாய் கொடுங்கள், நான் வேறு உலோகத்தில் உங்களுக்கு முதலீடு செய்கிறேன்” என்று சொன்னால் கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு தெரிந்து தங்கமும் வெள்ளியும் லாபத்திலும், தாமிரம் நட்டத்திலும் இயங்குகின்றன. இதை விட்டு, முன்பின் விலை விவரம் தெரியாத வேறு உலோகத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.

அவர் ”புதிய உலோகம் ஒவ்வொரு கிலோவும் 200 ரூபாய்தான், உங்களுக்கு 5 கிலோ வாங்கித் தருகிறேன் ” என்று சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அதை மலிவு என்று நினைப்போமா? புதிய உலோகம் என்ன என்று தெரியாமல் முடிவுக்கு வர முடியாது. கூடாது. புதிய உலோகம் அலுமினியமாக இருக்கலாம். அது விலை கூடுமா குறையுமா என்று நமக்கு தெரியாது. அதற்கு பதில் தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்யலாமே? “தங்கம் கிராம் 1000 ரூபாய், புதிய் உலோகம் தான் மலிவு” என்று யாரும் நினைப்பதில்லை.

அதைப்போலவே, பரஸ்பர நிதியின் (தோடின், அல்லது கம்பியின்) மதிப்பு, அதில் இருக்கும் அடிப்படை பங்குகளை (தங்கமா அல்லது தாமிரமா என்பதைப்) பொறுத்தது. பழைய பரஸ்பர நிதிகள் பற்றி நமக்கு தெரியும். இப்பொழுதும் தங்கம் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால்,தங்கத்தையும் வெள்ளியையும் தாமிரத்தையும் ஒப்பிட்டு, தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்வோம்.

ஒரு சிலர், தாமிரம் ஏற்கனவே மிகவும் இறங்கி விட்டது, இனி கீழே போகாது, மேலேதான் போகும் என்று முடிவு செய்து முதலீடு செய்யலாம். அதில் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், தெரியாத “புதிய உலோகத்தில்” முதலீடு செய்வது சூதாட்டம்தான். புதிய பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது, ‘புதிய உலோகம் கிலோ 200 ரூபாய்தானாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு கிராம் தங்கம் வாங்குவதை விட 5 கிலோ புதிய உலோகம் வாங்கலாம்” என்று சொல்வதைப் போல. (இதே வார்த்தைகளை “ஆயிரம் ரூபாய் கொடுத்தால், NFOஇல் 100 யூனிட் கிடைக்கும், பழைய பரஸ்பர நிதியில் 15 யூனிட்தான் கிடைக்கும். NFO தான் better” என்று, என் கூட வேலை செய்பவர் என்னிடம் வாதாடி இருக்கிறார்)

பிறகு எதற்கு இவ்வளவு NFO? மக்களே, புதிய பரஸ்பர நிதி விற்பதில் ஏஜண்டுகளுக்கு அதிக கமிஷன் உண்டு. அதில் initial expense என்று கூறி பணம் பறிக்க வழி உண்டு. பழைய பரஸ்பர நிதியை விற்பதில் கமிஷன் குறைவு. இப்போது SEBI, நீங்கள் நேரடியாக பரஸ்பர நிதியை வாங்கினால் கமிஷனே கூடாது என்று வேறு உத்தரவு போட்டு விட்டது. நீங்கள் புதிய பரஸ்பர நிதியை (NFO) வாங்க வேண்டும் என்று ஏஜண்டுகள் சொல்ல அவர்களின் சுய நலமும், உங்கள் நலம் பற்றிய அக்கறைஇன்மையுமே காரணம். அவர்கள் சுயனலமாக இருப்பது தவறில்லை. அதற்காக நம் நலனை தியாகம் செய்வதுதான் தவறு.

இத்தனை நாள் நமது அறியாமையைப் பயன்படுத்தி middleman எனப்படும் நடுத்தரகர்கள் சம்பாதித்தனர். இன்னமும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

2 comments:

Anbu(parasparfund@gmail.com) said...

நிதி திட்டமிடல் மற்றும் பரஸ்பரநிதி பற்றி நல்ல விளக்கம், கண்டிப்பாக அனைவரும் படித்துப் பயனுற வேண்டும். இன்னும் நண்பர்கள் பலருக்கு பரஸ்பரநிதி/பங்குச்சந்தை கெட்டவார்த்தையாகவே தோண எட்டி நிற்கின்றனர். முதலீடு செய்வதற்குமுன் குறைந்தபட்சம் அதுபற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது முதல்படி.

இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து கொடுக்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

S. Ramanathan said...

நன்றி அன்பு அவர்களே. நானும் சில வருடங்களுக்கு முன் பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்றே இருந்தேன். பக்குவமாக, நிதானமாக ஒரு நண்பர் எடுத்துச் சொல்லிய பிறகுதான் இவற்றைப் பற்றி புரிந்து கொள்ளவே முயற்சி செய்தேன். " நண்பருக்கு இத்துறையில் திறமை உண்டு,”என்றும், "நமக்கு நல்லதுதான் சொல்வார் " என்றும் நம்பிக்கை இருந்ததால்தான் காது கொடுத்து கேட்கவே ஆரம்பித்தேன்.

இப்போதும், நேரடியாக பங்கு வாங்குவது ‘ஏறக்குறைய சூதாட்டம்' என்று நினைக்கிறேன். இத்துறையில் விவரம் தெரியாதவர்களை, சுய நலத்திற்காக பலரும் தவறாக வழி நடத்துவதால்தான் நிறைய பேருக்கு அலர்ஜி. அவர்களுக்கு அலர்ஜியைக் குறைக்க, விவரங்களைப் புரிந்து பயன்பெற, எனது முயற்சியாக இந்த பதிவுகள்.